பதன்கோட் தாக்குதலுக்கு உடந்தை? 'சந்தேக' எஸ்.பி.க்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு!
பதன்கோட்: பதன்கோட் பயங்கரவாத தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தாரா என சந்தேகிக்கப்படும் குருதாஸ்பூர் போலீஸ் எஸ்.பில். சல்வீந்தர் சிங்கிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படை தளம் மீது பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி ஊடுருவிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் வீரமரணம் அடைந்தனர்.
பதன்கோட் மீதான தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தம்மை கடத்தி தமது ஜீப்பையும் பறித்துச் சென்றதாக தாக்குதல் நடத்தப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக போலீஸ் எஸ்.பி சல்வீந்தர்சிங் புகார் தெரிவித்திருந்தார். அப்போது முதலே அவர் மீது சந்தேகப் பார்வை விழுந்தது.
எல்லை தாண்டி தீவிரவாதிகள் ஊடுருவியதற்கு சல்வீந்தர்சிங் உதவியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு முன்வைகக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பதன்கோட் தாக்குதலுக்கு உதவிய கருப்பு ஆடுகள் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே சல்வீந்தர்சிங்கிடமும் புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். இருப்பினும் சல்வீந்தர்சிங் மீதான சந்தேகம் நீடிப்பதால் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் அந்த அதிகாரிகள் முடிவெடுத்தனர்.
இதற்காக தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நீதிமன்றத்திடம் முறையான அனுமதியை பெற உள்ளதாக கூறப்படுகிறது.