'பட்டினி இல்லா தேசம்' பசி போக்கும் சென்னையின் அன்னதான சேவை அமைப்பு
பட்டினி இல்லா சென்னையை உருவாக்க வேண்டும்.. பட்டினி இல்லா இந்தியாவை உருவாக்க வேண்டும்.. பட்டினி இல்லா உலகத்தை உருவாக்க வேண்டும். இது தான் எங்களின் தொலைநோக்கு சிந்தனை என கூறுகிறார் அருண் குமார். இவர் சென்னையில் இயங்கி வரும் No Food Waste என்ற அமைப்பின் சென்னை நிர்வாக இயக்குநர்.
No Food Waste என்ற அமைப்பு சென்னையில் உள்ள ஆதரவற்றவர்கள், காப்பகங்களில் வசிப்பவர்கள், சாலையோரம் வசிப்பவர்கள் ஆகியோருக்கு இலவசமாக உணவு வழங்கி வரும் அமைப்பு. அதுவும் அவர்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று மக்களுக்கான உணவை வழங்கி அவர்களின் பசியை தீர்த்து வயிறார உண்பதற்கு காரணமாக இருக்கிறது.
No Food Waste என்ற அமைப்பு 2014 இல் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர் பத்மநாபன். தேவைக்கு அதிகமாக ஒரு இடத்தில் இருக்கும் உணவை தேவை இருப்பவர்களுக்கு கொண்டு சென்று கொடுப்பதே இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கம். முதலில் கோவையில் எங்கள் சேவை தொடங்கினோம். அதற்கு பிறகு பல நகரங்களில் எங்கள் சேவையை விரிவுபடுத்தி இன்று இந்தியா முழுக்க 25 நகரங்களில் எங்கள் பணியை வெற்றிகரமாக செய்து வருகிறோம். எங்கள் அமைப்பு மூலம் லட்சக்கணக்காண மக்களின் பசியை தீர்த்திருப்பது எங்களுக்கு பெருமகிழ்ச்சியாக என்கிறார் அருண்குமார்.
சென்னையில் No Food Waste அமைப்பு 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்களுக்கு உணவுகள் வழங்கி வருகிறது.
கொரோனா காலத்திற்கு முன்பு வரை இந்த அமைப்பினரின் சேவை வேறுவிதமாக இருந்திருக்கிறது. கொரோனா காலத்திற்கு முன்பு சென்னையில் பல்வேறு இடங்களில நடைபெறும் விழாக்களில் உணவு மீதம் ஆனால் இந்த அமைப்புக்கு தகவல் வரும். பின்னர் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்திருக்கும் ஆம்னி வண்டிகளை எடுத்துக் கொண்டு விழா நடைபெறும் இடத்திற்கு செல்வார்கள்.
அங்கு மீதமான உணவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும். குறிப்பிட்ட விழா இடத்திற்கு செல்லும் போதே அங்கு எவ்வளவு உணவு மீதமாக இருக்கிறது? எத்தனை பேருக்கான உணவு இருக்கிறது ? அந்த உணவு எப்போது சமைக்கப்பட்டது?
எவ்வளவு மணி நேரத்திற்குள் அந்த உணவை சாப்பிட வேண்டும் ? என பல தகவல்கள் தொலைபேசி வாயிலாக திரட்டப்படும். அதன் பிறகு மீதமான உணவை எடுத்துச் செல்வதற்காக பாத்திரங்களையும் No Food Waste அமைப்பினர் தங்களுடனே எடுத்துச் செல்வார்கள்.
பின்னர் விழா நடைபெறும் இடத்தில் உணவு சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து சென்னையில் உள்ள 55 காப்பகங்கள் அல்லது சாலை ஓரங்களில் வசிப்பவர்களுக்கு அந்த உணவு குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு சென்று சேர்க்கப்படும். இதற்கான வண்டி வாடகை செலவு, பாத்திரங்கள் என அனைத்தும் இந்த அமைப்பினர் செய்துவிடுவார்கள். இதனால் வீணான உணவு குப்பை தொட்டிக்கு செல்லாமல் பல மணிதர்களின் வயிறு நிறைய இவர்களின் சேவை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
முதன்முதலில் திநகர், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தான் மீதமான உணவுகளை ஆதரவற்ற மக்களுக்கு விநியோகம் செய்தோம். ஆனால் இன்றைக்கு சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உணவு விநியோகம் செய்கிறோம்.திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கூட நாங்கள் உணவு விநியோகத்தை மேற்கொண்டு வருகிறோம். முதன்முதலாக ஒரு ஆம்னி வேனில் நாங்கள் உணவு விநியோகிக்க தொடங்கினோம். இன்று 7 வண்டிகளில் நாங்கள் உணவு விநியோகிக்க தொடங்கி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் அருண்குமார்.
’ஆனால் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இந்த அமைப்புக்கு வேறு பல சிக்கல்கள் எழுந்தன. கொரோனா காலகட்டத்தில் முன்பை போன்று பல நிகழ்ச்சிகள் நடைபெற வில்லை. இதனால் நாங்கள் ஏற்கனவே உணவை விநியோகம் செய்து வந்த சில இடங்களில் எங்களால் உணவை வழங்க முடியவில்லை. இதனால் அமைப்பில் இருந்தவர்களே சேர்ந்து சொந்த காசு போட்டு பொருட்களை வாங்கி உணவு விநியோகம் செய்யும் பணியை தொடங்கினார்கள். மேலும் கொரோனா காலகட்டத்தில் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு சில மக்கள் புலம்பெயர தொடங்கிய போது அவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. ஒரு நாள் தொடங்கிய இந்த பணி கிட்டத்தட்ட 200 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்றது.
கொரோனாவால் எங்களுக்கு கூடுதல் பொறுப்பு வந்திருப்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். அதன் அடிப்படையில் சில தொண்டு உள்ளங்கள் பல பொருட்களை கொடுத்து உதவினார்கள். அதைக்கொண்டு பள்ளிக்கரணையில் 1200 சதுர அடியில் ஒரு சமையலறையை அமைத்து அங்கு உணவு சமைத்து பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று இலவசமாக உணவு வழங்கினோம்.இங்கு தினமும் 200 முதல் 2000 பேருக்கு சுகாதாரமான முறையில் உணவு சமைக்க முடியும். தினமும் நாங்கள் இங்கு உணவு சமைத்து சுழற்சி அடிப்படையில் பல்வேறு ஆதரவற்றோர் தங்கும் காப்பகம், ஆதரவற்றோர் இல்லங்கள் என பல இடங்களுக்கு சூடான சுவையான உணவை சமைத்து வழங்குகிறோம்’ என்று கூறினார் அருண் குமார்.
ஒரு புறம் ஆதரவற்றோர்களுக்கு உணவை வழங்கும் இந்த அமைப்பு மற்றொரு புறம் எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கும், அவர்களோடு தங்குபவர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கி வருகிறது.
இந்த மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலோனார் ஏழை மக்களாக இருக்கிறார்கள். அதனால் அந்த நோயாளிகளுடன் வரும் குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில்கள் வழங்கி வருகிறார்கள். இவர்கள் வருவதற்கு முன்னரே அங்குள்ள மக்கள் இவர்களை எதிர்பார்த்து வரிசையில் காத்திருக்கிறார்கள்.
எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் பல பேர் சிகிச்சைக்காக செலவு செய்வதிலேயே அவர்களுக்கு மிகுந்த சிரமம் இருக்கும். நாங்கள் அவர்கள் உடன் இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பதால் அந்த பணம் மீதம் ஆகும். அதன் மூலம் மேலும் நோயாளிக்கு தேவையான மாத்திரைகளையோ அத்தியாவசியமான கூடுதல் பொருட்களையோ அவர்களால் வாங்க முடியும். இதனால் அவர்களும் நிம்மதியாக இருப்பார்கள் என்கிறார் அருண் குமார்.
பள்ளிக்கரணை பகுதியில் இந்த அமைப்பு அமைத்திருக்கும் சமையலறையில் 8 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அதில் கணவன் மனைவி என ஒரு தம்பதியும் இருக்கிறார்கள். தினமும் உணவு தேவைப்படும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சூடான உணவுகள் தயார்செய்யப்பட்டு இங்குள்ள மக்களால் பேக் செய்யப்பட்டு வைக்கப்படும். இந்த அமைப்பின் சார்பாக இருக்கும் வண்டி மூலம் தினமும் உணவு விநியோகம் சீராக நடைபெறுகிறது.
அதில் சில பேர் ஆதரவற்றவர்களுக்கு உணவு சமைத்து தர வேண்டும் என்று இந்த அமைப்பை அணுகிறார்கள். அவர்களிடமிருந்து மூலப்பொருட்களை வாங்கிக் கொண்டோ அல்லது அதற்குரிய பணத்தை பெற்று கொண்டோ., இவர்களின் சமையலறையில் உணவு சமைக்கப்பட்டு பசியோடு இருக்கும் மக்களுக்கு வழங்கப்படுகிறது.இந்த அமைப்பு இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கியிருக்கிறது.
பட்டினி இல்லா உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையோடு பயணிக்கிறது இந்த No Food Waste அமைப்பு.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்















Click it and Unblock the Notifications