கலப்பு மணம் செய்த மகனிடம் ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு போட்ட அப்பா!
இந்த வழக்கைப் போட்டுள்ளவரின் பெயர் சித்தநாத் சர்மா. இவர் ஒரு வழக்கறிஞர். இவர் தனது மகன் சுஷாந்த் ஜாசு மீது வழக்குப் போட்டுள்ளார். அதில், எனது மகன் கலப்பு திருமணம் செய்துள்ளான். எனவே அவனை நான் ஒதுக்கி வைத்து விட்டேன். இனிமேல் எனது பெயரை அவன் எந்த இடத்திலும் பயன்படுத்தக் கூடாது. மீறி எனது பெயரை பயன்படுத்தினால், பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் ரூ. 10,000 எனக்கு காப்புரிமையாக தர வேண்டும்.
மேலும் எனது பெயரையும், கெளரவத்தையும் பாழ்படுத்தி விட்டான் எனது மகன். எங்களது விருப்பத்தை மீறி அவன் வேறு சாதிப் பெண்ணை மணந்துள்ளான். எனவே அதற்கு இழப்பீடாக ரூ. 1 கோடி தர வேண்டும் என்று கூறியுள்ளார். தானாப்பூர் கோர்ட்டில் இந்த வழக்குப் போடப்பட்டுள்ளது.
சுஷாந்த் ஜாசு, மத்திய அஏரசில் சீனியர் வரி உதவியாளராக குஜராத் மாநிலம் பாலம்பூர் நகரில் பணியாற்றி வருகிறார். இவர் தானாப்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி திருமணம் செய்தார். இது இரு சாதித் திருமணமாகும். பெண், பாட்னாவில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார்.
வழக்கு குறித்து சர்மா கூறுகையில், நானும், எனது மனைவியும் இத்தனை காலமாக எங்களது மகனுக்காக நேரத்தை செலவிட்டுள்ளோம், பணத்தை செலவிட்டுள்ளோம். ஆனால் அவன் துரோகம் செய்து விட்டான். இத்தனை காலமாக வளர்த்து வந்த எங்களை விட்டு விட்டு 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த பெண்ணிடம் காதல் வயப்பட்டு எங்களைத் தூக்கி எறிந்து விட்டான்.
எனது மகனின் செயல், 400 ஆண்டு கால குடும்பத் திருமணப் பாரம்பரியத்தை கேலிக்கூத்தாக்கி விட்டது என்றார்.
இப்படியும் சில அன்புள்ள அப்பாக்கள்... இருக்கத்தான் செய்கிறார்கள்.