அக்கட தேசத்தில் “டுவிஸ்ட்”.. ஜெகனுக்கு ஸ்கெட்ச்! சந்திரபாபு நாயுடுவுடன் பவன் கல்யாண் கட்சி கூட்டணி
அமராவதி: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அவருடன் ஆந்திர தேர்தலில் கூட்டணி வைப்பதாக அறிவித்துள்ளார் ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யான்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஆந்திர பிரதேச மாநில முதலமைச்சராக இருந்தவர் சந்திரபாபு நாயுடு. கடந்த 9 ஆம் தேதி இரவு இவர் திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் ஆந்திர மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார். நந்தியாலா மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட சந்திரபாபு நாயுடு, அங்கு உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பேருந்தை நிறுத்தி உறங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, நந்தியாலா போலீசார் அங்கு வந்து சந்திரபாபு நாயுடுவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், விஜயவாடாவில் உள்ள சிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் ஊழல் வழக்கு தொடர்பாக பல மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மறுநாள் காலை, விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வழக்கு தொடர்பாக காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மாநில குற்றப் புலனாய்வுத் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே அவரை 14 நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
செப்டம்பர் 22 ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். மறுபக்கம் சந்திர பாபு நாயுடு தரப்பில் 2 ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் உடல் நிலை காரணமாக வீட்டுக்காவலில் வைக்கக் கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம், வீட்டுக்காவல் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே சந்திரபாபு நாயுடு கைதின்போது அவரை சந்திக்க சென்ற ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யான் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் சாலையில் படுத்து அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று சிறையில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து நலம் விசாரித்த பவன் கல்யான் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தெலுங்கு தேசம் கட்சியுடன் ஜனசேனா கட்சி கூட்டணி அமைக்கும். இரு கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் இணைந்து பணியாற்றுவோம். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை வீழ்த்த போராடுவோம்.
ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான வாக்குகள் சிதற நான் விரும்பவில்லை. அனைத்து ஒன்று திரட்டி அவரை வீழ்த்துவோம். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி இன்னும் 6 மாதங்களே நீடிக்கும். பாஜக என்னுடைய இந்த கூட்டணி முடிவை பாரதிய ஜனதா கட்சி ஏற்கும் என நம்புகிறேன்." என்று தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications