காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி: மக்கள் ஜனநாயக கட்சி ஆலோசனை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து மக்கள் ஜனநாயகக் கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது.
87 உறுப்பினர்களை கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது.
இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க மொத்தம் 44 இடங்கள் தேவை. 28 இடங்களைப் பெற்ற மக்கள் ஜனநாயகக் கட்சி, 25 இடங்களைக் கைப்பற்றிய பாரதிய ஜனதாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்தது. ஆனால் இதற்கு மக்கள் ஜனநாயகக் கட்சி எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை மக்கள் ஜனநாயகக் கட்சி விதித்திருந்தது. இதனை பாரதிய ஜனதாவும் ஏற்கவில்லை.
மேலும் 15 தொகுதிகளில் வெற்றி பெற்ற தேசிய மாநாடு கட்சியும், 12 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரசும், காஷ்மீரில் பாரதிய ஜனதா அரசு அமைவதை விரும்பவில்லை. இந்த கட்சிகள் மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தன. அதே நேரத்தில் இக் கட்சிகளின் ஆதரவை ஏற்பது பற்றி மக்கள் ஜனநாயக கட்சி தனது முடிவை பகிரங்கமாக அறிவிக்கவில்லை.
இந்தநிலையில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெரிய கட்சி என்ற முறையில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு ஆட்சி அமைக்க உரிமை உள்ளது; காஷ்மீரில் மதசார்பற்ற ஆட்சி அமைவதற்கு ஆக்கபூர்வமான ஆதரவை காங்கிரஸ் அளிக்கும் என்றார்.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க மக்கள் ஜனநாயக கட்சி தீர்மானித்து இருப்பதாக தெரிகிறது.
இதுபற்றி அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நயீம் அக்தர் கூறுகையில், மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாடு, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய பெரிய கூட்டணி உருவாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது என்றார்.
கூட்டணி அரசு அமைப்பது குறித்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் மக்கள் ஜனநாயக கட்சி மேலிடம் நேற்று ஆலோசனை நடத்தியது.












Click it and Unblock the Notifications