பத்ம விருதுகளை பொதுமக்களே பரிந்துரைக்கலாம்... முகம் தெரியாத ஹீரோக்களுக்கும் அங்கீகாரம்
பத்மவிருதுகளை யார் வேண்டுமானாலும் பரிந்துரை செய்யலாம் என பிரதமர் நரேந்திர மோடி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டெல்லி: பத்மவிருதுகளை பொதுமக்களே இணையதளம் மூலம் பரிந்துரைக்கலாம் என்ற புதிய அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை அறிவித்தார்.
கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், வணிகம், தொழில்துறை, பொது விவகாரங்கள், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் மிகச்சிறந்து விளங்குவோருக்கு மத்திய அரசு பத்மவிருதுகளை வழங்கி வருகிறது.
இந்த விருதுகளுக்கு பொதுவாக மத்திய அமைச்சர்கள் பரிந்துரை செய்வர். அவர்கள் பரிந்துரை செய்யும் நபர்கள் பொதுவாக அனைவராலும் அறியப்படக் கூடியவர்களாகவே இருப்பர்.
நிதி ஆயுக் கூட்டம்
டெல்லியில் கடந்த வியாழக்கிழமை நிதிஆயுக் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
பழங்கால நடைமுறைக்கு....
அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், பத்மவிருதுகள் கடந்த காலங்களில் அமைச்சர்கள், அரசியல்வாதிகளால் மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை மாற்ற இந்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மக்களே பரிந்துரை
அதன்படி பத்ம விருதுகள் யாருக்கு வழங்க வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கலாம். அந்தவகையில் www.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி வரை பரிந்துரைகளை அனுப்பலாம்.
சிறிய சீர்திருத்தம்
இது ஒரு சிறிய சீர்திருத்தம்தான். எனினும் இதன் மூலம் முகம் தெரியாத பல ஹீரோக்களுக்கு விருது கிடைப்பதோடு அவர்களுக்கான அங்கீகாரமும் கிடைக்கும். நாட்டின் ஒவ்வொருவரும் குடிமகனும் நாட்டுக்காக எதையாவது பங்களிப்பர் என்பதை நம்புவோம். இதன் மூலம் நமது வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் என்றார் அவர்.