சீமாந்திரா: முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தரேஸ்வரி மீது மிளகு தூள் வீசி தாக்குதல்!!
சோமளா: லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தரேஸ்வரி மீது மிளகு தூள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் மகள் புரந்தரேஸ்வரி, பாரதிய ஜனதா வேட்பாளராக சீமாந்திராவில் உள்ள ராஜம்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று சோமளா பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அந்த பகுதி மக்கள் மாடியில் நின்றபடி அவர் மீது பூ தூவினார்கள். அப்போது சிலர் மாடிகளில் நின்றவாறே மிளகு ஸ்பிரேயை அவர் மீது அடித்தனர்.
இதில் புரந்தரேஸ்வரிக்கும், அவருடன் வந்தவர்களுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை அப்புறப்படுத்தி தண்ணீர் கொடுத்து அமைதிப்படுத்தினார்கள்.
பின்னர் பேசிய புரந்தேஸ்வரி, நான் என்.டி.ராமராவின் மகள். சீமாந்திரா மற்றும் தெலுங்கானா பகுதி மக்கள் என்னை தங்கள் சொந்த மகள் போல பாவித்து வருகின்றனர்.
அப்படிப்பட்ட என் மீது மிளகு ஸ்பிரே வீசி சிலர் அவமானப்படுத்தி விட்டனர். நீங்கள் வாக்களிப்பதன் மூலம் அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.
தாக்குதல் நடத்தியது தெலுங்குதேசம்?
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரியும், புரந்தரேஸ்வரியும் சகோதரிகள். சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் தலைவரானதும் புரந்தரேஸ்வரி காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டார்.
தற்போது தெலுங்கானா பிரிவினைக்கு பிறகு சீமாந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பில்லை என்று கருதிய அவர் சமீபத்தில் பாரதிய ஜனதாவில் இணைந்து தேர்தலில் போட்டியிட சீட்டும் வாங்கினார்.
ஆனால் அவருக்கு சீட் கொடுக்க பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்தார். கூட்டணியைவிட்டே வெளியேறப் போவதாகவும் மிரட்டினார். பின்னர் சமாதானமானார் நாயுடு.
இந்நிலையில் புரந்தரேஸ்வரி மீது திடீர் என மிளகு தூள் வீசப்பட்டிருக்கிறது. தெலுங்குதேசம் கட்சியினரே இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.