ஜல்லிக்கட்டில் மிருகவதை.. புதிய ஆதாரங்கள் திரட்டுகிறோம்.. பூர்வா ஜோஷிபுரா
ஜல்லிக்கட்டில் நடந்த மிருகவதை பற்றிய ஆதாரங்களை திரட்டி வருகிறோம் என்று பீட்டா அமைப்பின் இந்தியத்தலைவர் பூர்வா ஜோஷிபுரா கூறியுள்ளார்.
டெல்லி: இந்தாண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக அளவு மிருகவதை நடந்துள்ளதாகவும் அது குறித்த புதிய ஆதாரங்களை திரட்டி வருவதாகம் பீட்டா அமைப்பு இந்திய தலைவர் பூர்வா ஜோசிபுரா கூறியுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டு எப்படியாவது ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தியே தீர வேண்டும் என சென்னை மெரினா உட்பட தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் புரட்சி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் வெற்றியாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் தமிழக சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச்சட்டம் அரசிதழிலும் வெளிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உட்பட தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதை பொறுத்து கொள்ள முடியாத பீட்டா அமைப்பினர் மீண்டும் ஜல்லிக்கட்டு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதுதொடர்பாக அந்த அமைப்பின் இந்திய தலைவர் பூர்வா ஜோஷிபுரா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது நடந்த ஜல்லிக்கட்டில் அதிகளவு மிருகவதை நடந்துள்ளது. அது குறித்த ஆதாரங்களை திரட்டி வருகிறோம் விரைவில் உச்சநீதிமன்றத்தில் வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications