16 நாட்களாக தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை இன்று குறைப்பு
Recommended Video
டெல்லி: 16 நாட்கள் கழித்து பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே செல்கின்றன.
கடந்த 16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டது. காலையில் எழுந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதை பார்த்து வாகன ஓட்டிகள் கவலை அடைந்தனர்.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 60 பைசாவும், மும்பையில் 59 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.
டீசல் விலை டெல்லியில் 56 பைசாவும், மும்பையில் 59 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பை அடுத்து டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 77.83க்கும், மும்பையில் ரூ. 85.65க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 68. 75க்கும், மும்பையில் ரூ. 73.20க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.80க்கும், டீசல் ரூ. 72.58க்கும் இன்று விற்கப்படுகிறது.
கடந்த 16 நாட்களில் மட்டும் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.