பூலான்தேவி வழக்கு.. தீர்ப்பு வெளியாகும் நாளில் ஆவணங்கள் மாயமானதால் பரபரப்பு
கான்பூர்: 40 ஆண்டுகளுக்கு முன்பு பூலான்தேவியின் கும்பலால் 20 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியிடும் நாளில் முக்கிய ஆவணங்கள் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் பெஹ்மால் கிராமத்தில் 1981-ஆம் ஆண்டு கொள்ளை கூட்டத்தின் தலைவியான பூலான்தேவி தனது அடியாட்களுடன் வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்த 20 பேரை கொன்று குவித்தனர்.
இது பூலான்தேவியை அந்த சமூகத்தைச் சேர்ந்த இருவர் பலாத்காரம் செய்ததற்கான பழிவாங்கும் செயல் என கூறப்பட்டது. இந்த படுகொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது.

என்கவுன்ட்டர்
இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்ற அப்போதைய உ.பி. முதல்வர் வி பி சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்த வழக்கில் பூலான்தேவி உள்பட 35 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. அந்த 35 பேரில் 8 பேர் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.

பூலான்தேவி சரண்
3 பேர் தலைமறைவாகினர். பின்னர் 1983-ஆம் ஆண்டு பூலான்தேவி மத்திய பிரதேச மாநில போலீஸாரிடம் சரணடைந்தார். 11 ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் 1994-ஆம் ஆண்டு விடுதலையானார்.

பூலான்தேவி கொலை
பின்னர் தன் மீதான வழக்குகளை சட்டரீதியில் எதிர்கொண்டார். அந்த சமயம் அரசியலில் இறங்கிய பூலான்தேவி எம்பியாகவும் பதவி வகித்தார். இந்த நிலையில் 2001-ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி ஒரு மர்மகும்பலால் அவரது வீட்டுக்கு வெளியே பூலான்தேவி கொல்லப்பட்டார்.

3 பேர் ஜாமீனில்
2012-ம் ஆண்டு கான்பூரில் உள்ள கொள்ளை சம்பவங்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பெஹ்மால் படுகொலை வழக்கில் உயிரோடு இருக்கும் 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. போஷா, பிகா, விஸ்வநாத், ஷியாம்பாபு ஆகிய அந்த 4 பேரில் போஷா மட்டும் சிறையில் உள்ளார். மற்ற 3 பேரும் ஜாமீனில் உள்ளனர்.

ஆவணங்கள் மாயம்
இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதிர்குமார் நேற்று தீர்ப்பு வழங்குவதாக இருந்தார். நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியதும், வழக்கு தொடர்பான உண்மையான ஆவணங்கள் மாயமாகி இருப்பதை நீதிபதி அறிந்தார்.

பரபரப்பு
இதையடுத்து நீதிமன்ற ஊழியர்களுக்கு கண்டனம் தெரிவித்த அவர் இந்த வழக்கை 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். நீதிமன்றத்தில் இருந்த ஆவணங்கள் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications