மார்க்சிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலராக சீதாராம் யெச்சூரி?
டெல்லி: மார்க்சிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலராக சீதாராம் யெச்சூரி அல்லது ராமச்சந்திர பிள்ளை தேர்ந்தெடுக்கப்படக் கூடும் என கூறப்படுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக இருக்கும் பிரகாஷ் காரத்தின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. ஹைதரபாத்தில் நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் அவர் பதவி விலக இருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் பொதுச்செயலர் பதவி 2 ஆண்டுகாலத்துக்கானது. ஒருவர் பொதுச்செயலர் பதவியில் 3 முறை இருக்கலாம். கட்சிக்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டால்மட்டும் 4 வது முறையாக பொதுச்செயலராக நீடிக்க முடியும்.
தற்போதைய பொதுச்செயலர் பிரகாஷ் காரத் தொடர்ந்து பதவியில் நீடிக்கக் கூடும் என்று கூறப்பட்டாலும் கட்சிக்குள் அவருக்கு மிகக் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. இதனால் பதவி விலகும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக பிரகாஷ் காரத்தின் நிலைப்பாடுகளால்தான் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக் கட்சி அளவுக்கு படுதோல்வியைத் தழுவியது என்று சீதாராம் யெச்சூரி போன்றவர்களின் குற்றச்சாட்டு. இதனால் இம்முறை சீதாராம் யெச்சூரி பொதுச்செயலராகலாம் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் 76 வயதாகும் ராமச்சந்திர பிள்ளையின் பெயரும் அடிபடுகிறது. தெலுங்கானா ஊடகங்களோ பி.வி. ராகவலுக்குத்தான் வாய்ப்பு அதிகம் என்று எழுதி வருகின்றன.
இவர்களுக்கு அப்பால் பிருந்தா காரத் பெயரும் அடிபடுகிறது. 2005ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கட்சி பொலிட்பீரோவில் இடம்பெற்றுளவர் பிருந்தா காரத். ஒரு பெண்ணை கட்சியின் பொதுச்செயலராக்கலாமே என்று பிருந்தா காரத் ஆதரவாளர்கள் முனைப்புகாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications