இனி ஓடும் ரயிலிலும் "பிசினஸில்" ஈடுபடலாம் - ரயில்வேயின் "ஹை டெக்: அறிமுகங்கள்!
டெல்லி: ரயில்களில் பயணித்தபடியே நமது அலுவலகப் பணிகள், வர்த்தகப் பணிகளை மேற்கொள்வதற்கேற்ற வசதிகளை ரயில்வே அறிமுகம் செய்கிறது. இதற்கான அறிவிப்பை ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா இன்று தனது ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், வர்த்தக பயணிகளின் நலனை முன்னிட்டு, அவர்களின் மதிப்பு மிக்க நேரங்களை மனதில் வைத்து சில புதிய வசதிகள் ரயில்களில் ஏற்படுத்தப்படவுள்ளன.
சில குறிப்பிட்ட ரயில்களில் கட்டண அடிப்படையில் அலுவலக வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். இதுதொடர்பான முன்னோடித் திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும்.
இதுதவிர, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரயில்வேயில் பேப்பர் இல்லாத அலுவலகங்கள் உருவாக்கப்படும். டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்படும்.
அனைத்து ஏ1 மற்றும் ஏ தர ரயில் நிலையங்களிலும், குறிப்பிட்ட ரயில்களிலும் வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என்று கெளடா கூறியுள்ளார்.