கேரளாவிடம் மோத வேண்டாம்... பாஜகவுக்கு, முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை!
கேரளாவின் வெங்கரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே.என்.ஏ.காதர் வெற்றி பெற்றதை அடுத்து கேரளா முதல்வர் விஜயன் "கேரளாவிடம் மோத வேண்டாம்" என பாஜக கட்சியை தாக்கி பேசியுள்ளார்.
டெல்லி: கேரளாவின் மலப்புரம் மாவட்டம் வெங்கரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஐக்கிய ஜனநாயக கூட்டணியின், முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் கே.என்.ஏ.காதர் வெற்றி பெற்றார். இதை அடுத்து கேரளா முதல்வர் விஜயன் "கேரள மக்களிடம் யாரும் மோத வேண்டாம்" என பாஜக கட்சியை தாக்கி பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு மீண்டும் பாஜகவுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் வார்த்தைப் போரை உருவாக்கியுள்ளது.
கேரளா மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன் பாஜக கட்சியும், ஆஎஸ்எஸ் இயக்கமும் இணைத்து மக்கள் பாதுகாப்பு பேரணி என்ற நீண்ட பேரணி ஒன்றை நடத்தி வந்தனர். அந்தப் பேரணிக்கு மக்கள் பெரிய அளவில் ஆதரவு தரவில்லை. அதுமட்டும் இல்லாமல் அந்தப் பேரணியை ஆரம்பித்த பாஜக கட்சித் தலைவர் அமித் ஷா பேரணியில் இருந்து பாதியில் வெளியேறினார்.
இந்தப் பேரணியில் கலந்து கொண்ட பாஜக தலைவர்கள் பலர் கேரளாவில் நிலவும் அரசியல் சூழலுக்கு எதிராக பேசி வந்தனர். இந்தப் பேரணியானது கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வெங்கரா சட்டசபை தொகுதி வழியாகவும் நடத்தப்பட்டது. ஆனால் இந்தப் பேரணிக்குப் பின்பு நடந்த வெங்கரா சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் பாஜக கட்சி வேட்பாளர் ஜனசந்திரன் வெறும் 5728 வாக்குகள் பெற்று 4வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.கேரளா வெங்கரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளர் காதர் 65,227 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
இதையடுத்து கேரளாவில் பேரணி நடத்திய பாஜக கட்சிக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தற்போது பதிலளித்துள்ளார்.
டெல்லியில் நேற்று பத்திரிகையாளர் சங்கம் நடத்திய 'ஆபத்தில் ஜனநாயகம்' என்ற தலைப்பிலான செமினாரில் பங்கேற்று பினராயி விஜயன் பேசுகையில் கூறியதாவது: கேராளாவில் வெறுப்பரசியலை பரப்ப நினைத்த பாஜக திட்டம் மொத்தமாக தோற்றுவிட்டது. கேரளா மக்கள் உங்களை எப்போதும் விரும்ப மாட்டார்கள். அதற்கு இந்த தேர்தல் முடிவுகளே சிறந்த உதாரணம். இனி பாஜக கட்சி கேரளாவோடு மோத வேண்டாம்" என்று கூறியுள்ளார். கேரளாவின் சுற்றுலா துறையை சீரழித்து, கேரள மக்கள் வாழ்வாதாரத்தை நசுக்கவே, கேரளா குறித்து தவறான கருத்துக்களை பாஜக பரப்பி வருவதாக பினராயி விஜயன் தெரிவித்தார்.
முதல்வரின் இந்த பேச்சு மீண்டும் பாஜகவுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் வார்த்தைப் போரை உருவாக்கியுள்ளது.