வானிலிருந்து ஹாயாக வந்து விழுந்த "ஆய்".. பாட்டியின் தோள்பட்டை முறிந்தது
போபால்: விமான கழிவறையில் இருந்து கீழே விழுந்த மனித கழிவு தாக்கி, மூதாட்டியின் தோள்பட்டை எலும்பு முறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள, ஆம்கோ என்ற கிராமத்தில், வானத்தில் இருந்து தேங்காய் சைசில் பெரிய ஐஸ் கட்டி ஒன்று விழுந்ததில் 60 வயது பெண்மணியான ராஜ்ராணி கவுட் என்பவரின் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக செய்தி வெளியாகி இருந்தது.
இந்த சம்பவம் கடந்த மாதம் 17ம் தேதி நடந்திருந்தது. இதுபோன்ற சம்பவம் இந்தியாவில் அரிது என்பதால் வியப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், வானத்தில் இருந்து விழுந்தது ஐஸ் கட்டி கிடையாது. வர்த்தக விமானம் ஒன்றில் இருந்து விழுந்த மனிதக் கழிவு மற்றும் சிறுநீர் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்த கிராமவாசி ஒருவர் கூறுகையில், ''இந்த கட்டி வானத்தில் இருந்து விழும்போது மொட்டை மாடி சுவற்றின் விழும்பில் விழுந்து ராஜ்ராணி தலையில் விழுந்தது. எனவே, அவர் உயிர் தப்பினார். நேரடியாக அவரது தலையில் விழுந்து இருந்தால் மண்டை ஓடு உடைந்திருக்கும்'' என்றார்.
வானத்தில் இருந்து விழுந்தது விமானத்தின் கழிப்பறையில் இருந்து விழுந்த மனிதக் கழிவுகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஏனெனில், விமானத்தின் கழிப்பறையில் கசிவுகள் ஏற்பட்டு விழும் கழிவுகள், திரவ வடிவில் இருந்தாலும், கீழே வரும்போது வெப்ப நிலை மாறுதல் காரணமாக திட வடிவ ஐஸ் கட்டியாக மாறி விழும் என்று விமானத்துறை நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஒருவேளை அந்தப் பெண்ணின் மீது விழுந்தது மனிதக் கழிவாக இருந்தால் விமானத்துறை சட்டத்தின்படி அந்தப் பெண்ணுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.