வாழ விரும்புகிறேன், உதவுங்கள்: 8 வயது ஹார்ட் பேஷன்ட் தையபா மோடிக்கு கடிதம்
ஆக்ரா: இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி தனது சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த தையபா என்ற 8 வயது சிறுமி 3ம் வகுப்பு படித்து வருகிறார். இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லாமல் அவரது பெற்றோர் தவித்து வந்தனர். ஷூ கம்பெனியில் கூலியாக வேலை செய்யும் தையபாவின் தந்தையால் தனது மகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. சிறுமியின் சிகிச்சைக்கு ரூ.15 முதல் 20 லட்சம் தேவைப்படுகிறது. சிறுமிக்கு டெல்லியில் தான் சிகிச்சை அளிக்க முடியும் என்றும் ஆக்ராவில் வசதி இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சிறுமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி தனது சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு கோரினார். அவரது கடிதம் கிடைத்த உடன் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு மத்திய அரசு டெல்லி அரசை கேட்டுக் கொண்டது. இதையடுத்து சிறுமிக்கு உடனே சிகிச்சையை துவங்குமாறு டெல்லியில் உள்ள குரு தேக் பகதூர் மருத்துவமனைக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தையபா கூறுகையில்,
பிரதமர் மோடி அனைவருக்கும் உதவி செய்வதை டிவியில் பார்த்தேன். நானும் ஒரு இந்திய குடிமகள் தான். வாழ விரும்பும் எனக்கு உதவுமாறு மோடிக்கு கடிதம் எழுதினால் என்ன என்று தோன்றியது. எனக்கு உதவி செய்துள்ள பிரதமருக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நன்றாக படித்து வங்கியில் வேலைக்கு சேர்ந்து தனது குடும்ப கஷ்டத்தை போக்க வேண்டும் என்பதே சிறுமியின் எதிர்கால கனவாக உள்ளது.