ரூபாய் நோட்டு விவகாரம்.. மாநிலங்களவையில் இன்று பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு?
மத்திய அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி, இன்று மாநிலங்களவை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ந் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றன.
இதனால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ரூபாய் நோட்டு விவகாரத்தில் முடங்கி கிடக்கின்றன. ரூபாய் நோட்டு விவகாரம் விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ரூபாய் நோட்டு விவகாரத்தில் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இன்று மாநிலங்களவை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.