ஒரு பதவி ஒரு பென்சன் திட்டத்தில் இருந்து மோடி பின் வாங்குகிறார்: ஆண்டனி சாடல்
டெல்லி: ராணுவத்தினருக்கு ஒரு பதவி ஒரு பென்சன் திட்டத்தை செயல்படுத்துவதில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி பின்வாங்கி செல்கிறார் என்று முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஏ.கே. ஆண்டனி சாடியுள்ளார்.
ராணுவத்தினருக்கு ஒரு பதவி ஒரு பென்சன் என்ற கோரிக்கை தேசிய அளவில் விஸ்வரூபமெடுத்து வருகிறது. இன்றைய சுதந்திரதின விழாவில் பிரதமர் மோடி இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இத்திட்டம் பற்றி குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. இது ராணுவத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஏ.கே. ஆண்டனி கூறியதாவது:
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்னாள் ராணுவத்தினருக்கான ஒரு பதவி ஒரு பென்சன் திட்டத்தை ஏற்று கொண்டு அதனை 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி நடைமுறைப்படுத்துவது என முடிவு செய்திருந்தது.
தனி நபரொருவருக்கான பென்சனை கணக்கிட சில குறிப்பிட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்வது என்பதே கேள்வியாக இருந்தது. 15 மாதங்கள் கடந்த பின் பிரதமர் போன்றோர் கொள்கை அளவில் இதனை ஏற்று கொள்கிறோம் என கூறுகிறார்கள்.
இது திட்டத்தில் இருந்து பின்வாங்குவது ஆகும். இது முற்றிலும் முன்னாள் ராணுவத்தினருக்கு அதிருப்தி அளிக்கும்.
இவ்வாறு ஆண்டனி கூறினார்.