சுர்ஜித் சிங் பர்னாலா மறைவுக்கு பிரதமர் மோடி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் இரங்கல்
தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா நேற்று காலாமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சண்டிகர்: தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உடல் நலக்குறைவால் சண்டிகர் மருத்துவமனையில் நேற்று காலாமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தமிழக முன்னாள் கவர்னருமான சுர்ஜித் சிங் பர்னாலா கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவர் சண்டிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார்.

சுர்ஜித்சிங் பர்னாலா 1990-91, 2004-2011 வரை இரண்டு முறை தமிழக கவர்னராக பதவி வகித்தார். வாஜ்பாய் அமைச்சரவையில் ரசாயனத்துறை அமைச்சராக பர்னாலா பதவி வகித்துள்ளார்.
லக்னோவில் சட்டம் பயின்ற பர்னாலா சுதந்திர போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். தமிழ்நாடு,ஆந்திரா,உத்தரகாண்ட் உள்ளிட்ட 4 மாநில கவர்னராக இருந்தவர் பர்னாலா என்பது குறிப்பிடத்தக்கது
ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் சுர்ஜித் சிங் பர்னாலாவின் மறைவு வேதனையளிக்கிறது. மேலும் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பங்களிப்பை தேசம் நினைவு கொள்ளும் என அவர் கூறியுள்ளார்.
இதேபோல் சுர்ஜித் சிங் பர்னாலா மறைவுக்கு ஆளுநர் வித்யாசகர் ராவ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: பர்னாலாவின் மறைவு அதிர்ச்சியையும் வேதனையும் தருகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள், விவசாயிகள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் பர்னாலா எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
சுர்ஜித் சிங் பர்னாலாவின் மறைவுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் ஆளுநர் பதவியில் ஜனநாயக நெறிமுறைகளுடன் செயல்பட்டவர் சுர்ஜித் சிங் பர்னாலா என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் திமுக அரசை கவிழ்க்க மத்திய அரசு கோரிய போது அதை துணிவுடன் எதிர்த்தவர் எனவும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications