பஹால்காமில் பெண்களை குறிவைத்ததே.. தீவிரவாதிகளின் அழிவுக்கு காரணமாக அமைந்தது! பிரதமர் மோடி பேச்சு
போபால்: மத்தியப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூரில் இந்தியப் பெண்களின் சக்தியை உலகம் பார்த்ததாக குறிப்பிட்டார். மேலும், பஹல்காம் தாக்குதல் மூலம் தீவிரவாதிகள் இந்தியாவைப் பிரிக்க முயன்றதாகவும் அதற்கு நாம் சரியான பதிலடி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இனி தீவிரவாதிகளை ஆதரிப்போர் மீதும் கடும் பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தில் போபாலில் ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300வது பிறந்த நாளை முன்னிட்டு 'மகிளா சக்திகரன் மகா சம்மேளனம்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பேசிய அவர், இந்தியாவின் பெண்கள் சக்திக்குச் சவால் விடுத்து தீவிரவாதிகளே தங்கள் அழிவைத் தேடிக் கொண்டதாகத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "பஹல்காமில் தீவிரவாதிகள் நமது அப்பாவி மக்களை ரத்தம் மட்டும் சிந்த வைக்கவில்லை. அவர்கள் நமது கலாச்சாரத்தைத் தாக்கினர். அவர்கள் நமது சமூகத்தைப் பிரிக்க முயன்றனர். பயங்கரவாதிகள் இந்தியாவின் பெண்கள் சக்திக்குச் சவால் விடுத்தனர். இந்த சவாலே பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் அழிவாக மாறியது.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா மிகத் துல்லியமான தாக்குதல்களை நடத்தின. பயங்கரவாத முகாம்களை முழுமையாக அழித்தன. பாகிஸ்தானில் பல கிமீ வரை சென்று தீவிரவாத முகாம்களை அழித்தோம். இந்திய வரலாற்றில் பயங்கரவாதத்திற்கு எதிரான மிகப் பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான நடவடிக்கை தான் ஆப்ரேஷன் சிந்தூர்.
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
நான் மீண்டும் ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எதிர்காலத்தில் இந்தியா மீண்டும் தாக்கப்பட்டால் பயங்கரவாதிகள் மட்டுமின்றி அவர்களை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். பயங்கரவாதிகள் மூலம் மறைமுகமாகப் போரை நடத்துவதை இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பதை ஆபரேஷன் சிந்தூர் தெளிவாக உலகிற்குக் காட்டியுள்ளது. நீங்கள் எங்குப் பதுங்கி இருந்தாலும் உங்கள் வீட்டிற்குள் வந்து தாக்குவோம். பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்கள் எவரும் அதற்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும்
இன்று, இந்திய பாதுகாப்புத் துறையில் பெண்களின் வலிமையை உலகம் காண்கிறது. நமது பிஎஸ்எஃப் மகள்கள் நமது எல்லைகளைப் பாதுகாத்து, ஆப்ரேஷன் சிந்தூரின் போது பொருத்தமான பதிலடி கொடுத்தனர்" என்றார்.
பின்னணி
இந்தியா பாகிஸ்தான் இடையே சில வாரங்களுக்கு முன்பு மோதல் வெடித்தது. கடந்த மாதம் காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலே இதற்குப் பிரதான காரணமாகும். காஷ்மீரில் சமீப காலங்களில் நடந்த மிகப் பெரிய தாக்குதலான இதில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்தியா பதிலடி
இந்தத் தாக்குதல் நடத்தியவர்களுக்குப் பாகிஸ்தான் உதவியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீதும் ஆப்ரேஷன் சிந்தூரை நடத்தியது. இந்திய ராணுவம் பக்காவாக திட்டமிட்டு நடத்திய இந்தத் தாக்குதலில் 100+ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications