100 'ஸ்மார்ட் சிட்டிகள்' திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
டெல்லி: நாட்டின் 100 நகரங்களை 'ஸ்மார்ட் சிட்டிகளாக' மேம்படுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார். இதேபோல் வாஜ்பாய் பெயரிலான அம்ருத் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.
நாட்டில் நகர்ப்புற வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் அனைவருக்கும் வீடு, ஸ்மார்ட் சிட்டி, அம்ருத் ஆகிய 3 திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்தது.
தமிழ்நாட்டில் 6 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தப்படும். இதேபோன்று அம்ருத் திட்டத்தின்கீழ் 33 நகரங்கள் புனரமைக்கப்பட உள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார காரணங்களால் பல்வேறு நகரங்களில் வசித்து வரும் பொதுமக்கள், பெரு நகரங்களுக்கு செல்கின்றனர். இதனால் மத்திய மாநில அரசுகளுக்கும், உள்ளாட்சிகளுக்கும் பல்வேறு நெருக்கடிகள் ஏற்படுகின்றன.
2050ல் சுமார் 81 கோடி பேர் நகரங்களில் வசிப்பார்கள் என மதிப்பிடப்பட்டு உள்ளதால் அதற்கு ஏற்ற வகையில் நகரங்களை மேம்படுத்துவது அவசியம். இந்த சவால்களை எதிர்கொள்வதன் ஒருபகுதியாக ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தொடங்கி வைத்தார்.