நாடு விடுதலை அடைந்தது முதல் பழங்குடி இனப் பகுதி வளங்களை சுரண்டியது காங்.-பிரதமர் மோடி அட்டாக்
போபால்: நாடு விடுதலை அடைந்தது முதல் ஆட்சி செய்தவர்கள் பழங்குடி இனமக்கள் வசிக்கும் பகுதிகளில் இயற்கை வளங்களை சுரண்டினர் என காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் "ரேஷன் ஆப்கே கிராம்" திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேச சிகப்பணு சோகை தடுப்பு திட்டம், நாடு முழுவதும் 50 ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிடப்பள்ளிகள் ஆகியவற்றுக்கும் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

பழங்குடிகளிடம் கற்போம்
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசியதாவது: நாடு விடுதலை அடைந்த பின்னர் நாட்டில் முதல் முறையாக பெரும் அளவிலான பழங்குடியின சமுதாயத்தின் கலை- கலாச்சாரம், விடுதலைப்போராட்டத்தில் அவர்களது பங்களிப்பு நினைவுகூரப்பட்டு பெருமையுடன் கௌரவிக்கப்படுகிறது. பாடல்கள் நடனங்கள் உள்பட பழங்குடியின மக்களின் ஒவ்வொரு கலாச்சார அம்சமும் ஒரு வாழ்க்கைப் பாடத்தை பிரதிபலிக்கிறது.

தியாகப் போராட்டங்கள்
விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்ற பழங்குடியின தலைவர்கள் மற்றும் தலைவிகளின் ஊக்கமூட்டும் வரலாற்றை நாட்டுக்கு முன்பாகக் கொண்டு வந்து புதிய தலைமுறையினருக்கு அவர்களை அறிமுகப்படுத்தவேண்டியது நமது கடமை. அந்நிய ஆட்சிக்கு எதிராக, காசி கரோ இயக்கம், மிசோ இயக்கம், கோல் இயக்கம் உள்ளிட்ட ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றன. கோந்த் மகாராணி வீர துர்காவதியின் துணிச்சலாகட்டும் அல்லது ராணி கமலாபதியின் தியாகமாகட்டும் நாடு அவர்களை மறவாது. வீர மகாரானா பிரதாப்பின் போராட்டத்தை அவருடன் தோளோடு தோள் நின்று போராடிய தைரியம் மிக்க பில் மக்களின் தியாகங்கள் இல்லாமல் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

வளங்களை சுரண்டினார்கள்
தேசத்தை கட்டமைப்பதில் பழங்குடியின சமுதாயத்தின் பங்கு குறித்து நாம் தேசிய அரங்குகளில் விவாதிக்கும்போது, சிலர் வியப்படைகிறார்கள். அவர்களுக்கு இந்திய கலாச்சாரத்தை வலுப்படுத்துவதில் பழங்குடியின சமுதாயம் எந்த அளவுக்கு பங்களித்துள்ளது என்பது தெரியாது. பழங்குடியின சமுதாயத்தின் பங்களிப்பு குறித்து நாட்டுக்கு சொல்லப்படாததும். அவ்வாறு சொன்னாலும் மிகக் குறைந்த அளவு தகவல்களை அளித்து வந்ததும்தான் இதற்கு காரணமாகும். சுதந்திரத்திற்குப் பின்னர் பல பத்தாண்டுகளாக நாட்டின் ஆட்சியை நடத்தியவர்கள், தங்களது சுய நல அரசியலுக்கு முன்னுரிமை அளித்ததால்தான் இவ்வாறு நடந்தது. நாட்டின் இதரப் பகுதிகளில் கிடைப்பது போல இன்று பழங்குடியினப் பகுதிகளில் ஏழைகளுக்கு வீடுகள், கழிவறைகள், இலவச மின்சாரம், எரிவாயு இணைப்புகள், பள்ளி, சாலை மற்றும் இலவச சிகிச்சை போன்ற வசதிகள் அதே வேகத்தில் கிடைத்து வருகின்றன. முன்பு அரசில் இருந்தவர்கள் இந்தப் பகுதிகளை சுரண்டும் கொள்கையைப் பின்பற்றி வந்தார்கள். நாங்கள் இந்தப் பகுதிகளின் வளங்களை முறையாகப் பயன்படுத்தும் கொள்கையைப் பின்பற்றி வருகிறோம்.

பழங்குடியினருக்கு பத்ம விருதுகள்
பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த விருதாளர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையை அடைந்த போது உலகம் அதிர்ச்சியடைந்தது. பழங்குடியின மற்றும் கிராமப்புற சமுதாயத்தில் பணிபுரியும் மக்களின் பத்ம விருதாளர்கள் நாட்டின் உண்மையான ரத்தினங்கள். டந்த 7 ஆண்டுகளில் 9 புதிய பழங்குடி ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ள தாய்மொழி பழங்குடியின மக்களுக்கு பயனளிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications