பாக். மீது ஐ.நா நடவடிக்கை எடுக்க சீனா தடை போட கூடாது: சீன அதிபரிடம் மோடி திட்டவட்டம்
டெல்லி: தீவிரவாதி விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக, ஐ.நா. நடவடிக்கை எடுப்பதை, சீனா தடுக்க கூடாது என்று இந்திய பிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் வலியுறுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய 5 மத்திய ஆசிய நாடுகளிலும், ரஷியாவிலும் பயணம் மேற்கொண்டுள்ளார்.
உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான்
டெல்லியில் இருந்து திங்கள்கிழமை உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, அதன்பின்பு 2 நாள் பயணமாக கஜகஸ்தான் சென்றார். அங்கு 7 மற்றும் 8ம் தேதிகளில் தங்கியிருந்த அவர், அந்நாட்டு அதிபர் நுர்சுலதன் நாசர்பயேவை சந்தித்து பேசினார்.
5 ஒப்பந்தங்கள்
இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கும் இடையே, ராணுவம், பாதுகாப்பு மேம்படுத்துதல் மற்றும் யுரேனியம் வழங்குதல் உள்பட 5 முக்கிய ஒப்பந்தகள் கையெழுத்தானது. இதையடுத்து கஜகஸ்தான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி ரஷ்யா சென்றடைந்தார்.
சீன அதிபருடந் சந்திப்பு
ரஷ்யாவின் உபா நகர் விமானநிலையத்தில் அவருக்கு உயரதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மோடி நேற்றிரவு, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து சுமார் 90 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். அப்போது, எல்லை பிரச்சனை உட்பட பல்வேறு விஷங்கள் விவாதிக்கப்பட்டன. முக்கியமாக லக்வி விவாகரம் பற்றி பேசப்பட்டது.
இந்தியா அதிருப்தி
மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லக்வியை விடுதலை செய்த பாகிஸ்தான் மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சியை சீனா முடக்க முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த சந்திப்பின் போது மோடி தெரிவித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக, சீனா, பாகிஸ்தானுக்கு சாலை அமைப்பதில் இந்தியாவுக்கு அதிருப்தி இருப்பதையும் மோடி வெளிப்படுத்தினார். ஐ.நா.வில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடு அந்தஸ்தை பெற, சீனா தடை போட கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.