‘அமராவதி’ அடிக்கல் நாட்டு விழாவிற்கு வரும் மோடி திருப்பதியில் சாமி தரிசனம்
டெல்லி: ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதி அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடி, மாலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதிக்கு அடிக்கல் நாட்டும் விழா நாளை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி காலை 9.25 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு, பகல் 11.55 மணியளவில் விஜயநகரத்தில் உள்ள கண்ணவரம் விமான நிலையம் வந்தடைகிறார். பகல் 11.55க்கு கண்ணவரம் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதியம் 12.20 மணிக்கு அமராவதி நகர ஹெலிகாப்டர் தளத்தை வந்தடையும் மோடி, 12.30 மணியில் இருந்து 1.45 மணிவரை நடக்கும் ஆந்திர மாநில புதிய தலைநகரத்துக்கான பூமி பூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.

பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு 1.55 மணிக்கு அமராவதி ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக 2.25 மணிக்கு கண்ணவரம் விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு விமானம் மூலமாக 3.25 மணிக்கு திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வருகிறார்.
பின்னர் மாலை 3.30 மணியில் இருந்து 3.45 மணிவரை ரேணிகுண்டா விமான நிலையம் அருகில் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட்டு, புதிதாக கட்டப்பட்டு உள்ள கருடா விமான நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றுகிறார் மோடி. அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருப்பதியில் மொபைல் தயாரிப்பு நிறுவன பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
சிறிதுநேர ஓய்விற்குப் பின்னர், மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு திருமலைக்கு செல்லும் மோடி அங்கு சாமி தரிசனம் செய்கிறார்.
பின்னர் திருமலையில் இருந்து புறப்பட்டு 6.55 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் வரும் மோடி, இரவு 7 மணிக்கு ரேணிகுண்டாவில் இருந்து புறப்பட்டு தனி விமானத்தில் டெல்லிக்கு செல்கிறார்.
பிரதமரின் வருகையை ஒட்டி ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் சுமார் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications