பிரதமர் நரேந்திரமோடி நாளை பூடான் பயணம்
டெல்லி: பிரதமரான பிறகு முதலாவது வெளிநாட்டு சுற்றுப்பயணமாக நாளை பூடான் செல்லும், நரேந்திரமோடி இரு நாள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
நரேந்திர மோடி இந்திய பிரதமராக கடந்த மாதம் 26ம்தேதி பதவியேற்றார். அதில் சார்க்நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த பூடான் பிரதமர் ஷெரிங் தோப்ஹய், மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அப்போது தனது நாட்டுக்கு வருமாறு மோடிக்கு அழைப்புவிடுத்தார். சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவருமே தங்கள் நாட்டுக்கு மோடி வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
அவற்றை ஏற்றுக் கொண்ட பிரதமர், முதலில் பூடான் செல்ல முடிவு செய்துள்ளார். ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் பூடான் நாட்டில் மோடி சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு செல்லும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும். தெற்காசிய பிராந்தியத்தின் பலம் பொருந்திய நாடான இந்தியாவிலிருந்து தங்கள் நாட்டுக்கு வருகை தரும் பிரதமரை வரவேற்க பூடான் அரசு முழு வீச்சில் தயாராகியுள்ளது.
பூடான் பயணத்துக்கு பிறகு அடுத்த மாதம் ஜப்பானுக்கு பிரதமர் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அதன்பிறகு பிரேசிலில் நடைபெறும் 'பிரிக்ஸ்' கூட்டத்தில் அவர் பங்கேற்பார்.