மீனவர் கொலைக்கு இரங்கல் இல்லை... ஓட்டு கேட்பதில் குறியாக உள்ள மோடி
இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய மீனவர் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவிக்காமல் வடமாநிலங்களில் நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல்களில் அனைவரும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி: இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உயிரிழந்த மீனவருக்கு இரங்கல் கூட தெரிவிக்காமல் மணிப்பூர் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தலுக்கு வாக்கு மட்டும் கேட்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் 6 மீனவர்கள் திங்கள்கிழமை இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எச்சரிக்கை ஏதும் விடுக்காமல் அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
இதில் கழுத்தில் குண்டு பாய்ந்து பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்தார். சரோன் என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் மீனவ பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை பிரிட்ஜோவின் உடலை பெற மாட்டோம் என்று ராமேஸ்வரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் 2-ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2-ஆவது நாளாக
இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூடு குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 2 நாளாக 'மௌன போராட்டம்' நடத்திவருகிறார். மத்திய அரசும், பிரதமரும், தமிழக மீனவர்களை கிள்ளுக்கீரையாக மதித்து வருவது இதன் மூலம் உள்ளங்கை நெல்லிக் கனியாகிவிட்டது.

அமெரிக்கா என்றால் பாசம்
ஆயிரக்கணக்கான மைல் தூரத்தில் உள்ள அமெரிக்காவில் வாழும் வட இந்தியர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்து போகும் சுஷ்மா ஸ்வராஜ், நாட்டின் முன்னோடி மாநிலங்களின் ஒன்றான, தமிழகத்தில் இதுபோன்ற துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதற்கு ஒரு இரங்கலும் தெரிவிக்கவில்லை. அமெரிக்க வாழ் வட இந்தியர் அல்லது தெலுங்கு மக்களுக்காக துடிக்கும் சுஷ்மாவின் இதயம் தமிழகத்தை சேர்ந்த மீனவருக்கு என்ற போது மட்டும் அமைதியாகுவது ஏன்?
|
ஓட்டு கேட்கும் வெட்கக் கேடு
இன்று மணிப்பூர் மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
|
ராஜஸ்தான் முதல்வருக்கு வாழ்த்து
இன்று பிறந்தநாள் காணும் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ள மோடி, அவர் நீண்ட காலம், ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
|
பரோச் பாலம் திறப்பு
குஜராத் மாநிலத்தில் பரோச் பாலத்தை நேற்று திறந்துவைத்ததையும் பெருமை பொங்க படம் பிடித்து டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதற்கெல்லாம் நேரம் கிடைக்கும் மோடிக்கு தமிழகமும் இந்தியாவில் தானே உள்ளது என்ற உணர்வு ஏற்படாதது ஏன்? ஆந்திரத்தில் செம்மரங்களை வெட்டியதாக ஆந்திர வனத்துறையினரால் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மோடி இதேபோல மவுனம் காத்து அப்போதும் தமிழர்கள் உணர்வை புறந்தள்ளினார்.

இலங்கையை பார்த்து பயம்?
ஒரு உயிருக்கு உரித்தான மதிப்பை மோடி ஏன் தரவில்லை என்பது தமிழர்கள் அனைவரிடமும் எழுந்துள்ள கேள்வி. பாகிஸ்தான் என்ற வார்த்தையே கேட்டாலே பதறி துடிக்கும் மோடி, இலங்கை என்றதும் வாய் மூடி மவுனியாவது சீனாவின் மீதான அச்சத்தாலா? வலிமையான அரசை உருவாக்கிவிட்டோம் என்று மோடி அரசு கூறிவருவது குட்டி நாடான இலங்கையை கூட எதிர்க்க முடியாத கையாலாகத்தனத்தைதானா?












Click it and Unblock the Notifications