ஒன்றாக சேர்ந்து தீவிரவாதத்தை ஒழிப்போம்: நவாஸ் ஷெரீஃபுக்கு மோடி பதில் கடிதம்
டெல்லி: ஒன்றாக சேர்ந்து தீவிரவாதத்தை ஒழிப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அனுப்பிய கடிதத்திற்கு பதில் அனுப்பியுள்ளார்.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கலந்து கொண்டார். இதையடுத்து இந்திய பயணம் ஷெரீஃபுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அவரை இந்தியா ஒரு பள்ளி சிறுவனை போல் நடத்தியதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் தெரிவித்திருந்தார். இதற்கிடையே இந்நிலையில் இந்திய பயணம் மிகவும் திருப்திகரமாக இருந்ததாக ஷெரீஃப் மோடிக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து மோடி ஷெரீஃபுக்கு இன்று பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் மோடி கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளும் ஒன்றாக சேர்ந்து தீவிரவாதத்தை ஒழிக்க பாடுபட வேண்டும் என்று மோடி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் வன்முறை இல்லா சூழலில் சேர்ந்து பணியாற்ற காத்திருப்பதாக மோடி அக்கடித்ததில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக மோடி தான் பிரதமராக பதவியேற்ற மறுநாளே நவாஸ் ஷெரீஃபை சந்தித்து பேசினார். அப்போது அவர் தீவிரவாதம், பாகிஸ்தானில் நடக்கும் மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கை விரைந்து முடிப்பது குறித்து ஷெரீஃபுடன் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தியது. இன்றும் மெந்தர் செக்டர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இப்படி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அட்டூழியம் செய்து வரும் நிலையில் தீவிரவாதத்தை ஒடுக்க சேர்ந்து பாடுபடுவோம் என்று மோடி ஷெரீஃபுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்று இருநாட்டு தலைவர்களும் விரும்புவதையே இது நிரூபிக்கிறது.












Click it and Unblock the Notifications