பேரிடர் மேலாண்மை ஆணைய 7 உறுப்பினர்களையும் ராஜினாமா செய்ய பிரதமர் அலுவலகம் வலியுறுத்தல்!
டெல்லி: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் 7 உறுப்பினர்களையும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மத்தியில் மோடி அரசு பதவியேற்ற நிலையில் முந்தைய காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டது. இதில் பெரும் சர்ச்சை வெடித்து வருகிறது.
இந்த நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் 7 உறுப்பினர்களையும் ராஜினாமா செய்யுமாறு பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. இந்த ஆணையத்தில் சசிதர் ரெட்டி, கே.எம்.சிங், பி. பட்டாச்சார்யா, ஜே.கே.சின்ஹா, முசாஃபர் அகமது, கே. சலீம் அலி, மேஜர் ஜெனரல் ஜேகே பன்சால் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
இதில் ஜே.கே. பன்சால் இந்த ஆணையத்தில் கடைசியாக உறுப்பினராக சேர்க்கப்பட்டவர். இவர் சிபிஐ சிறப்பு இயக்குநராக இருந்ததுடன் குஜராத்தில் நரேந்திரமோடிக்கு நெருக்கடியை கொடுத்த இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கையும் விசாரித்தவர்.
தற்போது உள்துறை செயலர் கோஸ்வாமி இந்த 7 உறுப்பினர்களையும் அழைத்து ராஜினாமா செய்யுமாறு நேற்று வலியுறுத்தி இருக்கிறார்.
இந்த ஆணையமானது பிரதமர் தலைமையிலானது. இதன் உறுப்பினர்கள் அனைவரும் இணை அமைச்சர்களுக்கு சமமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications