ராஜ்நாத் சிங் கேட்ட அதிகாரியை உதவியாளராக நியமிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு!
டெல்லி: உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கேட்டுக்கொண்டும் கூட, அவர் விரும்பிய தனி உதவியாளரை நியமிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும் 8 அமைச்சர்களுக்கும் இதுபோன்ற பதில்தான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து கிடைத்துள்ளது. அமைச்சர்கள் தங்களுக்கு தனி உதவியாளர்களை நியமித்துக்கொள்வது வழக்கம். அமைச்சர்களின் பணி கால அட்டவணை உள்ளிட்டவற்றை இவர்கள்தான் மேற்பார்வையிடுவார்கள்.

உறவினர்களுக்கு 'நோ என்ட்ரி'
நரேந்திரமோடி பிரதமரானதும், ஒரு உத்தரவை வெளியிட்டார். அதில், உறவுக்காரர்கள் யாரையும் அமைச்சர்கள் தங்கள் தனி உதவியாளராக நியமிக்க கூடாது என்று கறாராக கூறப்பட்டிருந்தது. அதுபோல முந்தைய ஆட்சியில் அமைச்சர்களிடம் தனி உதவியாளர்களாக இருந்தவர்களையும் தற்போதைய ஆட்சியில் பணியமர்த்த கூடாது என்பதும் வாய்மொழி உத்தரவாம்.

பிரதமர் அலுவலகத்துக்கு அதிகாரம்
இந்த உத்தரவுகள் மீறப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தனி உதவியாளர்களை அமைச்சர்களே நேரடியாக நியமிக்க மோடி அரசு தடை விதித்துள்ளது. பிரதமர் அலுவலகத்திற்கு அதிகாரிகளின் பெயர் அனுப்பப்பட்டு அலுவலகம் ஓ.கே. சொன்னால்தான், அமைச்சர்களால் தங்களது தனி உதவியாளரை நியமிக்க முடியும்.

ராஜ்நாத்சிங் கோரிக்கை நிராகரிப்பு
இந்நிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது தனி உதவியாளராக 1995-ம் ஆண்டு பிரிவு அதிகாரியான அலோக்சிங் பணியாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். இதை ஏற்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த சல்மான் குர்ஷித்திடம், அலோக்சிங் தனி உதவியாளராக பணியாற்றியதால் ராஜ்நாத்சிங் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

விதிமுறை தளர்வு இல்லை
இந்த விஷயத்தில் பிரதமரே தலையிட வேண்டும் என்று ராஜ்நாத்சிங் விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை, பிரதமர் அலுவலகமும் தனது விதிமுறையை உள்துறை அமைச்சருக்காக தளர்த்தவில்லை. வேறு ஒரு நல்ல அதிகாரியை பரிந்துரை செய்யுமாறு பிரதமர் அலுவலகம் ராஜ்நாத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஸ்மிருதி இராணிக்கும் இதே கதிதான்
பிரதமருக்கு அடுத்த அந்தஸ்திலுள்ள உள்துறை அமைச்சகத்தை நிர்வகிப்பதால், ராஜ்நாத்சிங்கிற்காவது, அவரது கோரிக்கை ஏற்கப்படாததற்கு விளக்கம் தரப்பட்டது. ஆனால் இதேபோன்ற தனி உதவியாளர் கோரிக்கையுடன் வந்த ஸ்மிருதி இராணி உட்பட 8 அமைச்சர்களுக்கு விளக்கம் கூட அளிக்கப்படாமல் அவர்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அதிகாரிகள் அதிருப்தி
ஆயினும் ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் அரசின் இந்த நடவடிக்கை சலசலப்பை ஏற்படுத்துகிறது. கடந்த கால அமைச்சர்களின்கீழ் பணியாற்றியவர்கள் என்பதால் தங்களையும் குற்றவாளிகள், ஊழல்வாதிகள் போல பார்ப்பதா என்ற கேள்வி அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications