சகோதரிகள் திருமணத்திற்கு மன்மோகன் சிங்கிடம் நிதி கேட்ட இளைஞர்… உதவிக்கு உத்தரவிட்ட பிரதமர் மோடி
லக்னோ: லட்சக்கணக்கில் வரதட்சணை கேட்பதால் சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்க இயலாத இளைஞர் ஒருவர் நிதி உதவி கேட்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடந்த 2014 ஜனவரி மாதம் கடிதம் எழுதினார். இதற்கு மோடி பிரதமர் ஆனபின்னர் அவரது அலுவலகம் சார்பில் ஒரு ஆண்டுக்குப் பின்னர் பதில் வந்துள்ளது.
இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ஏழை பெண்கள் வரதட்சணையால் திருமணம் செய்து கொள்ளமுடியாமல் முதிர்கன்னிகளாகவே இருக்கின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சஹ்ர் பகுதியைச் சேர்ந்த மஞ்சித் என்ற அந்த இளைஞர், தனது 2 சகோதரிகளுக்கும் திருமணம் செய்துவைப்பதற்காக மாப்பிள்ளை பார்த்துள்ளார்.
ஏழைக்குடும்பத்தில் பிறந்த அவரிடம், பெண் பார்க்க வந்தவர்கள் வரதட்சணை பொருட்கள் அடங்கிய பெரிய பட்டியலையே கொடுத்துள்ளனர். இதனால் மலைத்துப்போன அந்த இளைஞர் எப்படி தனது சகோதரிகளுக்கு திருமணம் செய்து கொடுத்து கரையேற்றப்போகிறேன் யோசித்துள்ளார்.
அப்போது அவருக்கு யோசனை வரவே வரதட்சணைப் பொருட்கள் குறித்த பட்டியலை கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதமாக எழுதியுள்ளார். தனது சகோதரிகளுக்கு திருமணம் செய்துவைக்க உதவுமாறு அந்த கடிதத்தில் இளைஞர் மஞ்சித், கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு மோடி பிரதமர் ஆன பின்னர் பதில் கடிதம் அனுப்பியுள்ளது பிரதமர் அலுவலகம், மஞ்சித்தின் கோரிக்கை குறித்து அறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில், வரதட்சணை கொடுமையால் உயிரிழக்கும் பெண்கள் பட்டியலில் உத்தரப்பிரதேச மாநிலம் முக்கிய இடம் வகிக்கிறது. எனவே இனி இதே டெக்னிக்கை எல்லோரும் கையில் எடுத்தாலும் ஆச்சரியமில்லை.
தமிழகத்தில் தாலிக்கு தங்கம், படித்த பட்டதாரி பெண்களுக்கு 50000 ரூபாய் திருமண உதவி பள்ளி படிப்பு முடித்த பெண்களுக்கு ரூ.25000 நிதி உதவி என கொடுப்பதால் ஓரளவு ஏழை பெண்களின் திருமணம் சிரமமின்றி முடிகிறது. இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை மத்திய அரசு அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழும் நாள் வெகு தொலைவில் இல்லை.












Click it and Unblock the Notifications