புல்வாமா தாக்குதல்: பாபர் மசூதியுடன் முடிச்சுபோட்டு வாட்ஸ்அப் ஸ்டேடஸ்.. மாணவர் மீது தேச துரோக வழக்கு
ஸ்ரீநகர்: புல்வாமா தாக்குதல் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வைத்த காஷ்மீர் மாணவரை போலீசார் தேசத்துரோக வழக்கில் கைது செய்தனர்.
ஜம்மு காஷ்மீரின் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 2019 பிப்., 14ல் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் (சிஆர்பிஎப்) வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். வெடிபொருட்கள் நிரப்பிய காரை வீரர்களின் வாகனங்கள் மீது மோதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு நம்வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். 'சர்ஜிகல்' ஸ்டிரைக்' எனப்படும் துல்லிய தாக்குதல் மூலம் பயங்கராவாதிகளின் முகாம்களை அழித்தனர்.

பாகிஸ்தான் ஆதரவு
முன்னதாக புல்வாமா தாக்குதல் தொடர்பாக சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டனர். இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் இத்தகைய பதிவுகள் செய்தவர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

3வது ஆண்டு நினைவு அஞ்சலி
இந்நிலையில் புல்வாமா தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. வீரமரணம் அடைந்த வீர்களுக்கு இந்தியா முழுவதும் மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கிடையே, காஷ்மீரை சேர்ந்தவரும் மத்திய பிரதேசம் நிமுச் மாவட்ட கல்லூரியில் பயிலும் 18 வயதுக்குட்பட்ட மாணவர் ஒருவர் புல்வாமா தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்தார்.

கைது
அதாவது தாக்குதலில் இறந்தவர்களின் படங்களை வைத்து பாபர் மசூதி இடித்ததற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம், பாஜக தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரையடுத்து போலீசார் அந்த மாணவரை கைது செய்தனர்.

தேசத்துரோக வழக்கு
மாணவர் மீது இந்திய தண்டனை சட்டம் 124 ஏ (தேசத்துரோகம்), 153 ஏ (மத அடிப்படையில் இருதரப்புக்கு இடையே மோதலை உருவாக்குதல்), 505 பொதுமக்களுக்கு இடையூறு வழிவகுக்கும் தகவலை வெளியிடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பிரதமரின் உதவித்தொகையில் படிப்பு
இதுகுறித்து நிமுச் போலீஸ் சூப்பிரண்டு சுராஜ் வர்மா கூறுகையில், ‛‛சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த மாணவர் பிகாம் முதலாம் ஆண்டு படிக்கிறார். பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலம் கல்லூரியில் பயின்றி வருகிறார். அவரது செல்போன், மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர் பல்வேறு சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் ராணுவ பக்கங்களை பின்தொடர்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications