"இந்தியாவின் மகள்"- நிர்பயா ஆவணப்படத்தை திரையிட்ட 2 பேர் கைது
ஆக்ரா: டெல்லியில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயா குறித்த ஆவணப்படத்தை தடையை மீறி வெளியிட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த மருத்துவ மாணவி பலாத்காரம் தொடர்பாக ‘இந்தியாவின் மகள்' என்ற பெயரில் ஆவணப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. இச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் பேட்டியுடன் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த படத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், இந்தியாவில் ஆவணப்படத்தை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, உத்தரபிரதேசத்தின் ஆக்ரா அருகே உள்ள ருப் தானு கிராமத்தில் நேற்று முன்தினம் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த கேதான் தீட்சித் மற்றும் கவுரவ் ஆகியோர் இந்த ஆவணப்படத்தை பொது இடத்தில் திரையிட்டனர்.
ஆவணப்படம் ஆங்கிலத்தில் இருந்தபோதிலும், அது குறித்து மொழிபெயர்க்க தன்னார்வ தொண்டர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த படத்தை ஏராளமான பெண்கள் உள்பட பலரும் பார்த்தனர்.
தடை செய்யப்பட்ட இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பியதற்காக போலீசார் வழக்கு பதிவு செய்து கேதான் தீட்சித் மற்றும் கவுரவ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications