சசிகலா புஷ்பாவின் டெல்லி, சென்னை வீடுகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை/டெல்லி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவின் டெல்லி, சென்னை வீடுகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் திமுகவின் திருச்சி சிவா எம்பியை அதிமுகவின் சசிகலா புஷ்பா எம்.பி. தாக்கிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் பின்னர் ராஜ்யசபாவில் பேசிய சசிகலா புஷ்பா, முதல்வர் ஜெயலலிதா தம்மை அறைந்தார் என்றும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய மிரட்டினார் எனவும் பேச நாடே அதிர்ந்தது. இதனால் அதிமுகவில் இருந்து உடனே சசிகலா புஷ்பா நீக்கப்பட்டார்.

இதனிடையே சசிகலா புஷ்பாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரியில் உள்ள அவரது கணவர் வீட்டில் தாக்குதல் நடத்தினர். இதில் வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் நொறுங்கின.
இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக சசிகலா புஷ்பா தரப்பில் போலீசில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை.
இச்சம்பவத்தால் சென்னை அடையாறு இந்திரா நகர் முதல் குறுக்கு தெருவில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டு முன்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் உள்ள சசிகலா புஷ்பா வீட்டு முன்பு அம்மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications