காவிரியில் கூடுதல் நீர் திறப்பு எதிரொலி: பெங்களூரு விதான் சவுதாவை சுற்றி அதிரடிப்படை குவிப்பு
பெங்களூரு: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். தண்ணீர் திறப்பதறக்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக சட்டசபை கட்டிடம் அமைந்துள்ள விதான் சவுதாவை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரியில் 15,000 கன அடி நீர் 10 நாட்களுக்கு திறக்கப்பட வேண்டும். ஆனால் கர்நாடகாவில் காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட கடும் எதிர்ப்பு ஏற்பட்டு போராட்டங்கள் வெடித்துள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக விவசாயிகள் சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். கர்நாடக மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பிற்பகல் முதல் தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே அரசு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும் தமிழக அரசு பேருந்துகள், கொளத்தூர் அருகே உள்ள பாலாறு சோதனைச்சாவடியுடன் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி சித்தராமைய தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக சட்டசபை கட்டிடம் அமைந்துள்ள விதான் சவுதாவை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications