"மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம் தேவை.. ஹிந்து மக்கள்தொகை குறைகிறது" ஆர்எஸ்எஸ்-ன் தத்தாத்ரேயா!
பிரயக்ராஜ்: மதமாற்றம் காரணமாக மக்கள்தொகை குறைந்து வருவதாக ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயக்ராஜில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அகில இந்திய செயற்குழு கூட்டம் நான்கு நாட்களாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏராளமான ஆர்எஸ்எஸ் முக்கியத் தலைவர், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில் சமூக நடவடிக்கைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தற்போது பெண்கள் எல்லா துறைகளிலும் கால் பதித்து வரும் நிலையில், சமூகப் பணிகளில் பெண்களின் பங்கை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மதமாற்றம் பற்றி ஆர்எஸ்எஸ்
இதனைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், நாட்டின் பல்வேறு இடங்களில் மதமாற்றம் நடந்து வருகிறது. இதனால் மக்களிடையே மதமாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு முயற்சித்து வருகிறது. இதன் விளைவாக பல்வேறு மாநிலங்களில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய மக்கள், மீண்டும் ஹிந்து மதத்திற்கு வருவதற்கான சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது.

கடும் சட்டம்
அதுமட்டுமல்லாமல், மக்களிடையே மதமாற்றத்தை தடுக்க கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும். திருமணம் மூலம் பல பகுதிகளில் மதமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் சில மாநிலங்களில், திருமணம் மூலம் மதமாற்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

ஹிந்துக்களின் மக்கள்தொகை
தொடர்ந்து, மதமாற்றம் மற்றும் வங்கதேசத்தில் இருந்து இடம்பெயர்தல் காரணமாக ஹிந்துக்களின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. பீகாரின் வடக்கு பகுதிகளான பூர்னியா மற்றும் கதிஹார் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஹிந்து மக்கள் தொகையில் சமச்சீரற்றதன்மை அதிகமாக காணப்படுகிறதது. இந்த விவகாரத்தை பரிசீலிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு ஒரே மாதிரியான தேசிய மக்கள் தொகைக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று ஆலோசித்துள்ளதாக தெரிவித்தார்.

இடஒதுக்கீடு பலன்
அதேபோல் யார் மதம் மாறுகிறார்களோ, அவர்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன் கிடைக்கக் கூடாது என்று கூறிய அவர், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடியின சமூகத்தினரிடையே ஆர்எஸ்எஸ் அமைப்பின் விழிப்புணர்வு முயற்சிகளால் மக்கள் மத்தியில் "ஹிந்து" என்ற உணர்வு உருவாகியுள்ளது. இதனால் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஏராளமான மக்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைய முன்வருகின்றனர் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications