பார்ன்ஹப் வழக்கு: வலுக்கட்டாயமாக உடலுறவுக் காட்சி - 50 பெண்களுக்கு போர்ன் ஹப் நிறுவனம் இழப்பீடு
வலுக்கட்டாயமாக உடலுறவுக் காட்சிகளில் நடிக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படும் 50 பெண்களுக்கு பார்ன் ஹப் இணையதளத்தின் தாய் நிறுவனம் இழப்பீடு வழங்கியிருக்கிறது.
வயதுவந்தோருக்கான படங்கள் மற்றும் காணொளிகளை வழங்கும் Girls Do Porn என்ற நிறுவனம் கேமராவுக்கு முன் உடலுறவு கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும், இந்தக் காட்சிகள் எங்கெல்லாம் பகிரப்படும் என்பது குறித்து பொய் கூறியதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினர்.
இப்படியொரு குற்றச்சாட்டு இருப்பதை அறிந்த பிறகும் Girls Do Porn நிறுவனத்துடன் கூட்டு வைத்திருப்பதாகக் கூறி போர்ன் ஹப் நிறுவனத்தின் மீது, தொடர்புடைய 50 பெண்கள் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் பெண்களுக்கும் பார்ன்ஹப் நிறுவனத்துக்கும் இடையே சமரசத் தீர்வு ஏற்பட்டிருக்கிறது. எனினும் அது தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை.
சட்டவிரோதமானவற்றை தங்களது தளங்களில் வெளியிடுவதை சற்றும் ஒப்புக் கொள்வதில்லை என பார்ன்ஹப் இணையதளத்தின் தாய் நிறுவனமான MindGeek தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- பாலியல் தொழிலை குற்றமாக்க சூளுரைத்த ஸ்பெயின் பிரதமர்
- பார்ன்ஹப் இணையதளத்தில் பல்லாயிரம் ஆபாச காணொளிகள் நீக்கம்
"சிக்கலைத் தீர்ப்பதற்கு இருதரப்பும் பரஸ்பர தீர்வை எட்டின. அதன் விதிமுறைகள் ரகசியமானவை" என்று பெண்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரையன் ஹோல்ம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபரில் பாலியல் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக மூத்த அதிகாரிகள் கைது செய்யப்படும் வரை "கேள்ஸ் டூ பார்ன்" நிறுவனம் மைன்ட்கீக் நிறுவனத்தின் கூட்டாளியாக இருந்தது.
இது பார்ன்ஹப் மற்றும் பிற பொது வலைத்தளங்களில் பல காணொளிகளைப் பதிவேற்றியது. அமெரிக்க அதிகாரிகளால் கேள்ஸ் டூ போர்னுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து இந்தக் காணொளிகளை பார்ன்ஹப் நீக்கியது.
'மாடலிங்' என்ற போர்வையில்...
கேள்ஸ் டூ பார்ன் நிறுவனம் விளம்பரங்களுக்கான மாடலிங் என்ற போர்வையில் இயங்கியிருக்கிறது. விண்ணப்பித்த இளம் பெண்களுக்கு ஆபாச வீடியோக்களை உருவாக்குவது வேலை தரப்பட்டது.
இந்தப் பணி ரகசியமாக இருக்கும் என்றும், அவர்களின் காணொளிகள் இணையத்தில் வெளியிடப்படாது என்றும் கூறப்பட்டிருக்கிறது. தனி நபர்கள் அல்லது தொலைதூர சந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் அந்தப் பெண்களிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அந்தக் காணொளிகள் பார்ன்ஹப் உள்ளிட்ட தளங்கள் வழியாக பொதுவெளியில் விநியோகிக்கப்பட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.
கேள்ஸ் டூ பார்ன் நிறுவனம் செய்த மோசடி மற்றும் வன்புணர்வு புகார்களை விவரித்து மைண்ட்கீக் நிறுவனத்துக்கு அனுப்பிய பிறகும் அவர்கள் தங்களது கூட்டை முறித்துக் கொள்ளவில்லை என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான முதல் வழக்கு 2016-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.
"சட்ட விரோத உள்ளடக்கங்களை தங்களது தளங்களில் வெளியிடுவதை மைண்ட்கீக் ஒருபோதும் அனுமதிக்காது. எந்தவொரு சட்டவிரோதமான பதிவையும் அடையாளம் கண்டு ஒழிப்பதற்காக விரிவான, இந்தத் துறையின் முன்னணியில் உள்ள பாதுகாப்புக் கொள்கையைப் பின்பற்றுகிறோம்" என்று மைண்ட்கீக் நிறுவனம் தனது அறிக்கையில் கூறியிருக்கிறது.
"இணையப் பாதுகாப்பில் முதன்மையாக இருக்கவும், மோசமான நடவடிக்கையில் ஈடுபடுவோரின் சட்டவிரோத உள்ளடக்கத்தை ஆன்லைனில் வெளியிடுவதைத் தடுக்க எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்" என்று அந்த அறிக்கை கூறுகிறது.
குழந்தைகள் கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான காணொளிகள் குறித்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 2020 இல் பயனர்கள் பதிவேற்றிய உள்ளடக்கங்கள் அனைத்தையும் பார்ன்ஹப் நீக்கியது.
மைண்ட்கீக் நிறுவனத்துக்கு எதிரான முதல் வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 40 பெண்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை பின்னர் 50 ஆக உயர்ந்தது.
ஜேன் டோ மற்றும் ஓர் எண் என்ற பெயரில் இந்தப் பெண்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் சுமார் 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பீட்டைக் கோரினர்.
கேள்ஸ் டூ பார்ன் நிறுவனத்துடன் தொடர்புடைய பலர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. ஆட்சேர்ப்பு, தயாரிப்பு மற்றும் நடிகராகப் பணியாற்றிய ரூபன் ஆண்ட்ரே கார்சியா உட்பட பலருக்கு கடந்த நவம்பரில் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
"ஒருவர் பின் ஒருவராக போலி மாடலிங் விளம்பரங்கள், பொய்யான வாக்குறுதிகள், போலி நிறுவனங்கள் மூலமாகப் பெண்களைக் கவர்ந்திருக்கிறார்கள். இறுதியில் பெண்களை பாலியல் வீடியோக்களில் நடிக்குமாறு அச்சுறுத்தியிருக்கிறார்" என்று அமெரிக்க வழக்கறிஞர் ராண்டி கிராஸ்மேன் தீர்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
பெண்களை அச்சுறுத்தி கேமராவுக்கு முன் நடிக்க வைத்தாகக் குற்றம்சாட்டப்படும் கேள்ஸ் டூ பார்ன் நிறுவனத்தின் முன்னாள் இணை உரிமையாளர் மைக்கேல் ஜேம்ஸ் பிராடை கைது செய்ய எப்.பி.ஐ. முயற்சி செய்து வருகிறது.
அவர் தொடர்பான தகவல்களை் தருவோருக்கு அளிக்கப்படும் வெகுமதியை 50 ஆயிரம் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்தி இந்த மாதத் தொடக்கத்தில் அறிவித்தது.
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும் என்று நம்புவதாக எஃப்.பி.ஐ. கூறுகிறது.
பிற செய்திகள்:
- மோப்பம் பிடிக்கும் டூத் பிரஷ் உங்கள் புற்றுநோயைக் கண்டுபிடிக்கலாம்
- ஆப்கானிஸ்தானில் போலியோ முகாம் நடத்தும் ஐ.நா: ஒப்புக்கொண்ட தாலிபன்
- குர்மீத் ராம் ரஹீம் சிங்: இன்னொரு கொலை வழக்கிலும் சாமியாருக்கு ஆயுள் தண்டனை - யார் இவர்?
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: முழு அட்டவணை
- கேரளாவை உலுக்கும் கன மழை, வெள்ளம்: அடுத்த 5 நாட்களுக்கான முக்கிய தகவல்கள்
- சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - முழு பின்னணி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














Click it and Unblock the Notifications