மராட்டிய தேர்தல் முடிவு: புதுப்பிக்கப்படும் பாஜக-சிவசேனா உறவு; அமித்ஷா-உத்தவ் தாக்கரே பேச்சு
மும்பை: மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தலுக்கு முன்பு உடைந்த பாஜக - சிவசேனா கூட்டணி மீண்டும் புதுப்பிக்கப்படும் சூழ்நிலைகள் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக 123 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக விளங்குகிறது. சிவசேனா 63 இடங்கள் பிடித்து 2-வது இடத்தை பெற்றுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக கூட்டணி அரசை நடத்தி வந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தன. ஆனால் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனால் அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்ட பாஜக தனது தலைமையில் கூட்டணி அரசை அமைக்க உள்ளது. சிவசேனாவுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்வானி விருப்பம்
இதனிடையே, மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா உறவு மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று தான் நம்புவதாக, மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார். சிவசேனா ஆதரவுடன் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமையும் என்று விரும்புகிறார்.

25 ஆண்டுகால கூட்டணி
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மகாராஷ்டிராவில் பாஜக அரசு அமைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சிவசேனா உடனான 25 ஆண்டு கால கூட்டணி உறவு முறிந்திருக்கக் கூடாது. ஆனால், தேர்தல் முடிவுகளால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

பழைய உறவு புதுப்பிப்பு
சிவசேனா உடனான பழைய உறவு மீண்டும் புதுப்பிக்கப்படும் என்று நம்புகிறேன். அதேசமயம் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று அத்வானி கூறியுள்ளார்.

மோடி அலை
இந்நிலையில் மராட்டியத்தில் ஆட்சி அமைக்க எந்தஒரு கட்சியும் பெரும்பான்மையை பெறவில்லை என்று சிவசேனா தனது கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் தெரிவித்துள்ளது. மோடியின் அலை குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா, பிரச்சார கூட்டத்தில் மோடியின் அலை காணப்பட்டது.

பலமிழந்த அலை
ஆனால் அலை கரையை அடையும் முன் பலத்தை இழந்துபோனது. தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டுள்ள நிலையில் மாநிலம் இதனை எவ்வாறு எதிர்க்கொள்ளும் என்று தனது சந்தேகத்தை சேனா எழுப்பியுள்ளது.

உடைந்த தீர்ப்பு
மராட்டியத்தில் பலமுனைப் போட்டியால் பாரதீய ஜனதா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பலன் அடைந்துள்ளன என்று கூறியுள்ள சிவசேனா உடைந்த இந்த தீர்ப்பினால் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளீர்களா என்று வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

மக்களுக்கு வாழ்த்து
"எந்தஒரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை மக்கள் கொடுக்கவில்லை. தற்போது மக்கள் வேண்டுமென்றால் வெற்றி சங்கை முழங்கலாம், நாங்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

வாக்காளர்களுக்கு கேள்வி
நாங்கள் மராட்டியத்திற்காக பணிபுரிவோம், ஏனென்றால் சிவசேனா இந்த நோக்கத்திற்காக பிறந்தது. உடைந்த இந்த தீர்ப்பினால் வாக்களர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளீர்களா என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறோம்." என்று சிவசேனா குறிப்பிட்டுள்ளது.

அமித்ஷாவுடன் உத்தவ் தாக்கரே பேச்சு
அதேசமயம் தேர்தல் முடிவுகள் நிலவரம் பற்றியும் ஆட்சியமைப்பது குறித்து பாஜக உடன் இணைவது பற்றியும் பாஜக தலைவர் அமித்ஷா உடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இணைய விருப்பம்
பத்து நிமிடங்கள் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து பேசியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications