ஆஸ்திரேலியாவில் கொல்லப்பட்ட என்ஜினியர் பிரபாவின் உடல் சொந்த ஊரில் தகனம்
பெங்களூர்: ஆஸ்திரலேயாவில் குத்திக் கொலை செய்யப்பட்ட என்ஜினியர் பிரபாவின் உடல் பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு பலர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் அவரது சொந்த ஊரில் இன்று தகனம் செய்யப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வேலை பார்த்த பெங்களூரைச் சேர்ந்த என்ஜினியரான பிரபா கடந்த 7ம் தேதி இரவு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருக்கையில் மர்ம நபரால் குத்திக் கொல்லப்பட்டார். வீட்டுக்கு நடந்து செல்கையில் அவர் செல்போனில் தனது கணவருடன் பேசியபடியே சென்றபோது தான் இந்த சம்பவம் நடந்தது.

டார்லிங், என்னை ஒருவன் குத்திவிட்டான் என்பது தான் அவர் கடைசியாக போனில் தனது கணவரிடம் தெரிவித்த வார்த்தை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொலை இனவெறியால் நடந்தது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபாவின் கணவர் அருண்குமார் ஆஸ்திரேலியா சென்று தனது மனைவியின் உடலை சனிக்கிழமை பெங்களூருக்கு கொண்டு வந்தார்.
பெங்களூரில் பிரபாவின் உடலுக்கு கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜ் மற்றும் பாஜக தலைவர் அனந்த் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்துபிரபாவின் உடல் மங்களூரில் உள்ள அவரது சொந்த ஊரான அட்டூருக்கு இன்று கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
பிரபாவுக்கு 9 வயதில் மேகனா என்ற மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications