கோவாவில் வெற்றி கொடி நாட்டிய பாஜக..நாளை பிரமோத் சாவந்த் பதவியேற்கிறார்..பிரதமர் மோடி பங்கேற்கிறார்
பானஜி : கோவா மாநில முதலமைச்சராக 2வது முறையாக பிரமோத் சாவந்த் நாளை பதவி ஏற்கவுள்ள நிலையில், நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
கோவாவில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.
அங்கு பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி கோவா பார்வேர்டு கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது.

கோவா தேர்தல்
கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 13 தொகுதிகளில் பாஜகவும், 17 தொகுதிகளில் காங்கிரஸும் 3 தொகுதிகளில் காங்கிரஸின் கூட்டணி கட்சியான கோவா பார்வேர்டு கட்சி 3 இடங்களிலும் வென்றது. இந்த தேர்தலில் புதிய வரவாக ஆம் ஆத்மியும் தனித்து 39 இடங்களிலும் போட்டியிட்டது. மேலும் திரிணாமூல் காங்கிரஸ் மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கட்சியும் இணைந்து தேர்தலை சந்தித்தன.

மீண்டும் பாஜக வெற்றி
40 தொகுதிகள் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 21 இடங்கள் தேவை என்ற நிலையில், இந்நிலையில் 2022 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. வழக்கம் போல் எந்த கட்சியும் தனிப் பெரும்பான்மை பெறாத நிலையில், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதாவது கோவா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 20 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

முதல்வர் பிரமோத் சாவந்த்
3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நடைபெற்ற 5 மாநில தேர்தலில் பஞ்சாப் தவிர 5 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 21ஆம் தேதி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக மேலிட பார்வையாளர்களான மத்திய மந்திரிகள் நரேந்திரசிங் தோமர், எல்.முருகன், தேர்தல் பொறுப்பாளர் தேவேந்திர பட்னாவிஸ், சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்தெடுக்கப்பட்டார்.

பிரதமர் மோடி பங்கேற்பு
இந்நிலையில் கோவா மாநில முதலமைச்சராக 2வது முறையாக பிரமோத் சாவந்த் நாளை பதவி ஏற்கவுள்ளார். பதவி ஏற்பு விழா நாளை காலை 11 மணிக்கு டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள நிலையில், பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி , பாஜக தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் எனவும், பிரதமரை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications