3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை: குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி
டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த பிரகலாத்ராவ் வாஸ்னிக் என்ற நபரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.
குடியரசுத் தலைவராகப் பதவியேற்றதில் இருந்து பிரணாப் முகர்ஜி கடந்த 2 ஆண்டு பதவிக் காலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட 22 வழக்குகளில், வாஸ்னிக்குடன் சேர்த்து, 29 பேரின் கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். ஒரு மனுவின் மீது மட்டும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளார்.
கருணை மனு நிராகரிக்கப்பட்டவர்களில் மும்பை தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளி அஜ்மல் கசாப், நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு ஆகியோரும் அடங்குவர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று, வாஸ்னிக்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் 2007ம் ஆண்டு மார்ச் 2ம்தேதி, மூன்று வயது சிறுமியை பலாத்காரம் செய்து பிரகலாத்ராவ் வாஸ்னிக் கொலை செய்தார். இந்த வழக்கில் 2012ம் ஆண்டு பிப்ரவரி 29ம்தேதி பிரகலாத்துக்கு மரணதண்டனை விதித்தது உச்சநீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.