'கிங்மேக்கர்' பிரசாந்த் கிஷோர் அமைச்சர் அந்தஸ்து ஆலோசகரானார்- பீகார் முதல்வர் நிதிஷ் அதிரடி!
பாட்னா: பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரின் ஆலோசகராக கிங்மேக்கர் என வருணிக்கப்படும் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரசாந்த் கிஷோருக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசகர் பதவியானது அமைச்சர் அந்தஸ்து கொண்டதாகும்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் பிரச்சார வியூகம் அமைத்து தருபவர். சமூக வலைதளங்களை வெற்றிக்கான ஆயுதமாக்குவதில் பிரசாந்த் கிஷோர் டீம் தான் முன்னோடி.

லோக்சபா தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு காரணமான மோடி அலையை சமூக வலைதளங்கள் மூலமாக உருவாக்கியது கிஷோர் அண்ட் டீம்தான். அதன் பின்னர் பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் அலைக்கும் காரணகர்த்தாவாக இருந்ததும் பிரசாந்த் கிஷோர் அண்ட் கோதான்.
அதுவும் பரம வைரிகளாக இருந்த நிதிஷ்- லாலு இடையே சுமூகமாக தொகுதி பங்கீடு தொடங்கி அமைச்சரவை பங்கீடு வரை வெற்றிகரமாக சாதித்துக் காட்டியவர் பிரசாந்த் கிஷோர். தமிழக சட்டசபை தேர்தலில் இந்த பிரசாந்த் கிஷோர் அண்ட் கோவை திமுக வளைத்துப் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி கிங்மேக்கராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரசாந்த் கிஷோருக்கு தற்போது அமைச்சர் அந்தஸ்துடன் கூடிய ஆலோசகர் பதவியை வழங்கியுள்ளார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். நிதிஷ்குமார் அளித்துள்ள வாக்குறுதிகளை செயல்படுத்துவது, பீகார் மாநில முன்னேற்றத்துக்காக திட்டங்கள் ஆகியவை தொடர்பான ஆலோசனைகளை நிதிஷ்குமாருக்கு பிரசாந்த் கிஷோர் "அதிகாரப்பூர்வமாக" இனி வழங்குவார்.












Click it and Unblock the Notifications