வியூகம் வகுப்பதில் வல்லவர்.. அப்போது மோடியின் மாஸ்டர் மைண்ட்.. இப்போது வைரி.. பிகேவின் புது ஆட்டம்!
ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டது இந்திய அரசியலில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
டெல்லி: ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டது இந்திய அரசியலில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இவர் கடந்த சில தினங்களாக பாஜகவிற்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
அரசியலில் பெரிய அளவில் இல்லாத ஒருவர், அரசியலை மறைமுகமாக எப்படி கட்டுப்படுத்த முடியும். தேர்தல் முடிவுகளை எப்படி மாற்ற முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்தான் பிரசாந்த் கிஷோர். பலருக்கும் இவரை ஐ பேக் பிரசாந்த் கிஷோர் என்று கூறினால் நியாபகம் இருக்கும். நாடு முழுக்க பல மாநில தேர்தல்களில் இவர் தீவிரமாக பணியாற்றி இருக்கிறார்.
இந்தியாவில் பிரபலமாக இருக்கும் அரசியல் ஆலோசகர்தான் பிரசாந்த் கிஷோர். ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்த இவர் இந்தியா முழுக்க பல கட்சிகளுக்கு அரசியல் ஆலோசனை வழங்கி இருக்கிறார். இந்தியா முழுக்க எல்லா மாநிலங்களிலும் பிகே எனப்படும் பிரசாந்த் கிஷோர் தனி டீம் வைத்துள்ளார்.

தனி டீம்
பல லட்சம் செலவில் இந்த பணிகளை இவர் கவனித்து வருகிறார். இவரின் டீமில் பல இளம் இளைஞர்கள் களப்பணியாற்றி வருகிறார்கள். அதேபோல் அரசியல் அதிகம் தெரிந்த ஜாம்பவான்களும் இந்த குழுவில் இருக்கிறார்கள். குஜராத்தில் மூன்று முறை மோடி முதல்வராக வெல்லவும், 2014 லோக்சபா தேர்தலில் பாஜக வெல்லவும் காரணமாக இருந்தவர்தான் பிரசாந்த் கிஷோர். தற்போது அவரே பாஜகவை எதிர்க்க தொடங்கி உள்ளார். அரசியலில் இருந்தாலும் வெளிப்படையாக கட்சிகளை எதிர்த்து பேசாத இவர் முதல்முறையாக இப்படி பாஜகவை எதிர்த்து பேச தொடங்கி உள்ளார்.

எப்படி எல்லாம்
தேர்தல் தொடர்பான அனைத்து விஷயங்களை கரைத்து குடித்து இவர் அரசியல் திட்டங்களை வகுப்பார். இவர் அரசியலில் ஒரு முறை கூட சறுக்கியது இல்லை. ஒரு இடத்தை குறி வைத்தால், கட்சிதமாக அதை தாக்கும் திறன் கொண்டவர். அரசியல் கட்சிகளுக்கு எப்படி வெற்றிபெறுவது என்று ஆலோசனை வழங்குவது, கூட்டணி திட்டங்களை தருவது, எங்கு வெற்றி வாய்ப்புள்ளது, என்ன செய்ய வேண்டும் என்று கூறுவது. வாக்குறுதிகள் என்ன கொடுக்க வேண்டும், மேடையில், செய்தியாளர்களிடம் எப்படி பேச வேண்டும் என்று பல விஷயங்களை இவர் வழங்குவார்.

திமுக எப்படி
பிரசாந்த் கிஷோர் தற்போது தமிழகத்தில் திமுகவிற்காக பணியாற்றி வருகிறார். திமுகவிற்காக 2021 சட்டசபை தேர்தல் திட்டங்களை வகுத்து வருகிறார். இதற்காக பிரசாந்த் கிஷோர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மோடிக்கு தேர்தல் நேர ஆலோசகராக பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டார். தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் 2011 குஜராத் சட்டசபை தேர்தலில் மோடிக்காக பிரச்சார யுக்திகளை வகுத்து கொடுத்தார். அந்த தேர்தலில் மோடி வெற்றிபெற காரணமாக அவர் இருந்தார்.

பாஜக நண்பன் எதிரி
அதேபோல் 2014 லோக்சபா தேர்தலிலும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பாஜகவால் பயன்படுத்தப்பட்டார். அப்போதும் பாஜக நாடு முழுக்க பிரபலம் அடைந்து வெற்றிபெற்றது. இப்படி பாஜகவையும், மோடியையும் வளர்த்துவிட்டவர்தான் தற்போது பாஜகவை எதிர்க்க தொடங்கி உள்ளார். சிஏஏதான் அவரின் கொந்தளிப்பிற்கு காரணம். சிஏஏ காரணமாக பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தவர், தற்போது நேரடியாக அமித் ஷாவுடன் சண்டை போட தொடங்கி உள்ளார்.

எதிர்க்க உள்ளார்
ஏற்கனவே பாஜகவிற்கு எதிராக 16 மாநில முதல்வர்களை ஒன்று திரட்டும் முடிவில் இறங்கி உள்ளார் பிரசாந்த் கிஷோர்.இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் செய்துள்ள டிவிட்டில் பாராளுமன்றத்தில் எப்போது மெஜாரிட்டிதான் வெற்றிபெறும். சட்டத்தையும் தாண்டி, இந்தியாவின் ஆன்மாவை காக்க வேண்டும் என்றால் பாஜக ஆளாத 16 மாநில முதல்வர்கள் ஒன்றாக கரம் கோர்க்க வேண்டும். இந்த சட்டத்தை நடைமுறைபடுத்தும் விதத்தை இந்த மாநிலங்கள்தான் மாற்ற வேண்டும்.
|
மாநில மக்கள்
முக்கியமாக பஞ்சாப், கேரளா, மேற்கு வங்க ஆளும் கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். அவர்கள் என்ஆர்சிக்கும் எதிராக வாக்களித்தனர். இதேபோல் மற்ற பாஜக ஆளாத மாநில முதல்வர்களும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த முன்னெடுப்பு மிகப்பெரிய அரசியல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. பாஜகவிற்கு - ஐக்கிய ஜனதா தளத்திற்கும் இவர் கொடுங்கனவாக இருப்பார் என்று அஞ்சப்படுகிறது.

தோல்வியே காணாத நபர்
பிரசாந்த் கிஷோர் ஆலோசனை வழங்கிய கட்சிகள் எல்லாம் பெரும்பாலும் தேர்தலில் வெற்றிபெற்று சாதனை படைத்து இருக்கிறது. அதன்பின் இவர் காங்கிரஸ் கட்சிக்கும் மத்திய பிரதேச தேர்தலில் உதவினார். அங்கு காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற வெற்றிகரமான கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கும் கிங் மேக்கர் பிரசாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர பிரதேச தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இவர்தான் ஆலோசனை வழங்கினார். இதனால்தான் கட்சி தொடங்கி 10 வருடத்திலேயே ஜெகன் முதல்வராக முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அட செம
பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சி அமைக்க இவர் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டார். இதற்கு பின்தான் நிதிஷ் குமார், பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்தார். தற்போது சிஏஏ காரணமாக பிரசாந்த் கிஷோர் மற்றும் நிதிஷ் இடையே சண்டை வந்துள்ளது. மொத்தமாக நிதிஷ் பிரசாந்தை புறக்கணித்து, அவரை கட்சியில் இருந்தும் நீக்கியுள்ளார். இதனால் தற்போது பிரசாந்த் கிஷோர் பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக வியூகங்களை வகுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

தவறான இடம்
ஒருமுறை கூட தோல்வியை தழுவாத அரசியல் ஆலோக்சர் பிரசாந்த் கிஷோர், தற்போது எதிர்க்கட்சிகள் பக்கம் திரும்பி இருக்கிறார். தான் வளர்த்துவிட்ட பிம்பத்தையே தற்போது பிரசாந்த் கிஷோர் எதிர்க்க துணிந்துள்ளார். இதற்கு எதிராக பாஜக அல்லாத மாநில தலைவர்களை ஒன்று திரட்டும் பணியிலும் இறங்கியுள்ளார். பாஜக இவரை எப்படி எதிர்கொள்ளும், இவரின் வியூகங்களை எப்படி எதிர்க்கொள்ளும் என்று கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

அமித் ஷா எதிர்ப்பு
தேசிய அரசியலில் பாஜகவை எதிர்க்கும் யாரும், இதுவரை அமித் ஷாவை எதிர்த்தது கிடையாது. நேரடியாக அமித் ஷாவிடம் யாரும் மோதியது கிடையாது. ஆனால் பிரசாந்த் கிஷோர் அமித்ஷாவை நேரடியாக எதிர்க்க தொடங்கி உள்ளார். ஏற்கனவே டெல்லியில் இவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசியல் ஆலோசனை வழங்கி உள்ளார். இதனால் பாஜக vs பிரசாந்த் கிஷோர் சண்டை டெல்லி தேர்தலில் தொடங்கி தமிழக தேர்தலில் விஸ்வரூபம் எடுக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications