பிரதியுஷாவின் தற்கொலை முட்டாள்தனமானது... டிவிட்டரில் கூறிய ஹேமமாலினி
மும்பை: தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை பிரதியுஷாவின் முடிவு முட்டாள்தனமானது என தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார் நடிகை ஹேமமாலினி.
மும்பையை சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகை பிரதியுஷா கடந்தவாரம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இந்தி சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரதியுஷா நடித்த இந்தி சீரியல் தமிழில் மண்வாசனை என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. எனவே, இவர் தமிழ் மக்களுக்கும் பரிச்சையமான நடிகை தான்.
காதல் பிரச்சினை...
காதல் பிரச்சினை காரணமாக பிரதியுஷா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது காதலர் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹேமமாலினி...
இந்நிலையில், பிரதியுஷாவின் தற்கொலை முடிவு முட்டாள்தனமானது என நடிகையும், பாஜக எம்.பியுமான ஹேமமாலினி கருத்துத் தெரிவித்துள்ளார்.
|
முட்டாள்தனமானது...
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதியுஷாவின் தற்கொலை முட்டாள்தனமானது. இதுபோன்ற முட்டாள் தனமான தற்கொலைகளால் எதையும் சாதித்து விட முடியாது.
வரம்...
வாழ்க்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை நாம் வாழ வேண்டும். எதற்காகவும் விட்டு விட கூடாது. தற்கொலை செய்வதற்கான உரிமை நமக்கு கிடையாது.
போராட்டமே வாழ்க்கை...
அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். விரக்தியில் கிடந்து திணறாமல், வெற்றி களிப்புடன் வெளிப்பட வேண்டும். ஏனென்றால், இந்த உலகம் ஒரு போராளியை தான் போற்றுமே தவிர, தோற்றவரை அல்ல" எனத் தெரிவித்துள்ளார்.
உணவாக மாறியது...
கூடவே, "பசியில் வாடும் ஊடகங்களுக்கு பிரதியுஷாவின் தற்கொலை சம்பவம் உணவாக மாறிவிட்டது. பிரபலங்களை பற்றி அடுத்து ஒரு பரபரப்பான செய்தி கிடைக்கும் வரை பிரதியுஷாவின் தற்கொலை சம்பவத்தை ஊடகங்கள் அசை போடும்" என ஊடகங்களையும் அவர் சாடியுள்ளார்.