சிக்கிம் முதல்வராக பதவியேற்றார் பிஎஸ் கோலே.. அரசியலுக்காக அரசுப்பள்ளி ஆசிரியர் பணியை உதறியவர்!
காங்டாக்: சிக்கிம் முதல்வராக பிரேம்சிங் தமாங் எனும் பிஎஸ் கோலே இன்று பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுநர் கங்கா பிரசாத் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சிக்கிமில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி லோக்சபா தேர்தலுடன் நடைபெற்ற சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. சிக்கிமில் மொத்தம் 32 இடங்களில் தேர்தல் நடந்தது. மெஜாரிட்டி பெற 17 இடங்களில் வெல்ல வேண்டும்.
அங்கு சிக்கிம் குடியரசு முன்னணி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால் அக்கட்சி தற்போது 15 இடங்களை வென்று ஆட்சியை இழந்துள்ளது. மாறாக சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது.

கட்சிக்கூட்டம்
வெற்றிபெற்றதை தொடர்ந்து அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் பிரேம்சிங் தமாங் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பதவி பிரமாணம்
இதைத்தொடர்ந்து இன்று பிரேம்சிங் தமாங் முதல்வராக பதவியேற்றார். காலை 10 மணிக்கு காங்டாக் பால்ஜோர் ஸ்டேடியத்தில் அம்மாநில கவர்னர் கங்கா பிரசாத் அவருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

பிஎஸ் கோலே
பிரேம்சிங்குடன் அவரது அமைச்சர்களும் பதவியேற்றனர். பிரேம்சிங் தேர்தலில் போட்டியிடாமலேயே முதல்வராக பதவியேற்கிறார். பிரேம் சிங் தமாங், பிஎஸ் கோலே என அழைக்கப்படுகிறார்.

அரசுப்பணியை உதறினார்
1990ஆம் ஆண்டு அரசுப்பள்ளி ஆசிரியராக தேர்வானார் பிஎஸ் கோலே. 3 ஆண்டுகள் அரசு ஊழியராக பணிபுரிந்த அவர், அரசியலில் இருந்த ஆர்வம் காரணமாக அரசு பணியை உதறினார்.

15ஆண்டுகள் அமைச்சர்
பின்னர் 1994ஆம் ஆண்டு முதல் முறையாக மேற்கு சிக்கிமின் எம்எல்ஏவான பிஎஸ் கோலே தொடர்ந்து 15 ஆண்டுகள் அம்மாநில அமைச்சராக பதவி வகித்தார். மேலும் அரசியலில் இறங்கியது முதல் தொடர்ந்து 25 ஆண்டுகள் எம்எல்ஏவாக பதவி வகித்தார்.

தேர்தலில் போட்டியிடவில்லை
இன்று முதல்முறையாக அம்மாநில முதல்வராக பிஎஸ் கோலோ பதவியேற்றுள்ளார். தேர்தல் பிரசார பணிகளுக்காக பிரேம்சிங் தமாங், இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications