பஞ்சாயத்து, சட்டசபை, லோக்சபா.. அனைத்தும் ஒரே நேரத்தில் தேர்தல்.. மத்திய அரசின் அடுத்த அதிரடி
டெல்லி: லோக்சபா தேர்தலின்போது அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் சேர்த்தே தேர்தலை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நேற்று டெல்லியில் இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக ஆளும் அனைத்து மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள் பங்கேற்றனர்.
மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், நிதின் கட்கரி, அருண் ஜேட்லி மற்றும், பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

மக்களிடம் விழிப்புணர்வு
"தேர்தல் நடத்தை விதிமுறைகளால், அரசு பணிகள் அவ்வப்போது பாதிக்கப்படுகின்றன என்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த இந்த ஆலோசனை கூட்டம் முதல் அடியை எடுத்து வைத்துள்ளது" என்றார் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பாஜக சீனியர் தலைவர் ஒருவர்.
2019ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலின்போதே மாநிலங்களுக்கும் எப்படி சட்டசபை தேர்தலை இணைந்தே நடத்துவது என்பது குறித்து ஆலோசித்தோம் என்கிறார் அவர்.

எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு
எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் மாநில முதல்வர்களையும் அழைத்து மத்திய அரசு ஆலோசனை நடத்தினால்தான், நாடாளுமன்ற தேர்தலின்போதே சட்டசபை தேர்தலை நடத்துவது சுலபமாக இருக்கும் என்று ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற சில முதல்வர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்துள்ளனர்.

பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், "வெறும் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களை சேர்ந்தே நடத்துவது மட்டும் திட்டம் கிடையாது. இந்த தேர்தல்களுடன் சேர்த்து, பஞ்சாயத்து மற்றும் முனிசிபல் தேர்தல்கள் வரை அனைத்தையும் ஒரே நேரத்தில் நடத்துவதுதான் குறிக்கோள். மக்களிடம் இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே முதல் பணி" என்று பாஜக சீனியர் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

மோடி ஆதரவு
பிரதமர் மோடியும் கூட 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற கொள்கையில் நம்பிக்கை உள்ளவர். அவ்வப்போது தேர்தல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தால் அரசு பணிகளின் வேகம் தடைபட்டுக்கொண்டே இருக்கும் என்பதும், பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரின் திறனும், உழைப்பும், நேரமும் தேர்தலுக்காகவே செலவிடப்படும் என்பதால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் விசாரணையின் வேகம் ஆகியவை பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது என்பதும் மோடி கருத்தாக உள்ளது.

தேர்தல் பின்னணி
உள்ளாட்சி, லோக்சபா, சட்டசபை என, அவ்வப்போது ஏதாவது ஒரு தேர்தல் நடந்தபடியே இருந்தால் மாநில அரசுகள் தீவிர கதியில் ஒழுங்காக பணியாற்ற முடியாது. வாக்காளர்களை கவருவதற்காக இலவசங்களை அறிவித்துக்கொண்டும், கவர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் கால விரயம் செய்துகொண்டும்தான் இருக்கும் என்கிறார் மும்பையை சேர்ந்த அரசியல் நோக்கர் ஜெய் முர்க். அதேநேரம், பாஜக பல மாநிலங்களில் பெற்றுவரும் தொடர் வெற்றிகள் அக்கட்சியை தைரியமாக இப்படி யோசிக்க வைத்திருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.












Click it and Unblock the Notifications