வாஜ்பாய் வீட்டுக்கு சென்று "பாரத ரத்னா" விருது கொடுத்தார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி!!
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அவரது வீட்டுக்கு நேரில் சென்று பாரத ரத்னா விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்து மகாசபையை உருவாக்கிய மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. 1998-2004ஆம் ஆண்டு காலத்தில் நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய் முதுமை காரணமாக தீவிர அரசியலில் ஒதுங்கி உள்ளார்.

மதன் மோகன் மாளவியா காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்தவர். நாடு விடுதலைக்கான போராட்டத்தின் போது இந்து மகாசபையை உருவாக்கியவர். இந்த அமைப்புதான் இந்துத்துவா கொள்கைகளை விதைத்த முன்னோடி அமைப்பாகும்.
வழக்கமாக ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில்தான் பாரத ரத்னா விருது வழங்கப்படும். ஆனால் இம்முறையோ மரபுகளை மீறி டெல்லியில் உள்ள வாஜ்பாய் வீட்டுக்கே நேரில் சென்று பாரத ரத்னா விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மூத்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications