ஆசிய நாடுகளிலேயே இந்தியாவின் வணிக சூழ்நிலை வலிமையானதாக உள்ளது: மோடி பெருமிதம்
டெல்லி: ஆசிய நாடுகளிலேயே இந்தியாவின் வணிக சூழ்நிலை வலிமையானதாக உள்ளதாக, அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் கலந்து கொண்ட தொழில் அதிபர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, நாட்டின் 66வது குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற கருத்தரங்கில், இந்திய - அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களுடன் அவர்கள் இருவரும் பல்வேறு வர்த்தக விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடினர். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் தலை சிறந்த தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அணில் அம்பானி, சுனில் மிட்டல், சைரஸ் மிஸ்ட்ரி, கவுதம் அதானி, விஷால் சிக்கா உள்ளிட்ட 17 பேரும், அமெரிக்கா சார்பில், பெப்சி நிறுவனத்தின் இந்திய தலைவர் இந்திரா நூயி உள்ளிட்ட 30 பேரும் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து பெரிய திட்டங்களையும் தான் நேரடியாக கண்காணிப்பதாக உறுதியளித்தார்.
மேலும், நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, " அனைத்து மிகப்பெரிய திட்டங்களையும் பிரதமர் அலுவலகம் கண்காணிக்கும். இந்தியாவில் வணிகம் செய்ய சிறந்த சூழலை ஏற்படுத்தித்தர அரசு விரும்புகிறது. இந்தியாவில் தொழில் தொடங்க தடையாக உள்ள நடைமுறைகளை அரசு நீக்கும். ஆசிய நாடுகளிலேயே இந்தியாவின் வணிக சூழ்நிலை வலிமையானதாக உள்ளது. நாட்டின் பணவீக்கம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவிகிதம் அதிகரித்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற 6 மாதத்தில் இந்தியாவில் அமெரிக்க முதலீடு 50 சதவீதம் உயர்ந்துள்ளது. தூய்மையான எரிசக்தியைபெற உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்திய வேளாண் துறையில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். திறமை, நோக்கம் மற்றும் வேகத்தில் கவனம் செலுத்த நான் விரும்புகிறேன். மிகப்பெரிய திட்டங்கள் பிரதம அலுவலகத்தால் கண்காணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு. இந்தியா முழு சாத்திய கூறுகளையும் கொண்டுள்ளது, நாம் திறமை மற்றும் நோக்கம் கொண்டுள்ளோம்.
கடந்த 8 மாதங்களாக நான் மக்களின் தீர்ப்பை நிறைவுசெய்ய, அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முழுவதுமாக பணியாற்றினேன். நமது பணி மிகவும் பெரியது. இது ஒரே இரவில் நடக்காது. நாம் நமது சவால்களை அறிந்துள்ளோம், ஆனால் நாம் நமது அதிக வெற்றிகளால் ஊக்குவிக்கப்பட்டுள்ளோம்.
நீங்கள் ஒரு திறந்த சூழலை தேடினால், நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுவோம் மற்றும் உங்களுடைய திட்டத்தில் உங்களுடன் பயணிப்போம். நம்மிடம் இளைஞர்கள் சக்தி உள்ளது. பசுமை புரட்சி இலைக்கை எட்ட இந்தியர்கள் கடுமையாக உழைத்துள்ளோம். பிரதான துறைகளில் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
கடந்த 4 மாதங்களில் மட்டும் 110 மில்லியன் புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. உலகபொருளாதாரத்தை ஸ்திரமாக்குவதில் முக்கிய நங்கூரமாக இந்தியா இருக்கும். இந்தியா-அமெரிக்க ஒன்றாக இணைந்து இந்த உலகை அனைவருக்கும் நல்லதாக உருவாக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications