எல்கே அத்வானிக்கு நவீன 'அமாவாசையாக' மாறி ஆப்பு வைத்த மோடி!
-ஆர்.மணி
அடுத்த குடியரசு தலைவர் பதவிக்கு ஆசைப் பட்டுக் கொண்டிருந்த பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் கனவுகளை மோடி அரசு சூட்சுமமாக தகர்த்தெறிந்து விட்டது.
25 ஆண்டுகளுக்கு முன்பு உத்திரபிரதேசத்தில் பாபர் மசூதி இடிக்கப் பட்ட வழக்கிலிருந்து அத்வானி, மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் முரளி மனோஹர் ஜோஷி, உமா பாரதி ஆகியோரை 2001 ம் ஆண்டு உத்திரபிரதேசத்தின் உள்ளூர் நீதிமன்றம் விடுவித்திருந்தது. 17 ஆண்டுகள் கழித்து புதன்கிழமை, ஏப்ரல் 5 ம் தேதி இந்த வழக்கில் அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களை மீண்டும் இந்த வழக்கில் சேர்த்து விசாரணையை விரைந்து நடத்துமாறு மத்திய அரசுக்கு, அதாவது இந்த வழக்கை நடத்தி வரும் சிபிஐ க்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டு விட்டது.
17 ஆண்டுகள் கழித்து இவ் வழக்கை மீண்டும் நடத்துமாறு, நாட்டை ஆளும் பாஜக அரசின் கூடுதல் வழக்கறிஞரே, உச்ச நீதிமன்றத்தை கேட்டுக் கொள்ளுவதும், அதனை உச்ச நீதிமன்றமும் அப்படியே ஏற்றுக் கொண்டு அத்வானிக்கு எதிரான வழக்கிற்கு புத்துயிர் கொடுத்திருப்பதும் பாஜக அரசின் தலைமையில் நிலவும் உள் முரண்பாடுகளை அப்பட்டமாக மக்கள் மன்றத்திற்கு கொண்டு வந்து விட்டது என்றே நாம் உறுதியாக சொல்லலாம்.
விஷயம் இதுதான் ... உத்திர பிரதேசத்தின் அயோத்தியில் இருந்த பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பாபர் மசூதி, டிசம்பர் 6, 1991 நாளில் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவாரத்தின் தொண்டர்களால் இடித்து தரைமட்டமாக்கப் பட்டது. இந்த வழக்கில் பலர் கைது செய்யப் பட்டனர். அப்போது நாட்டை ஆண்டு கொண்டிருந்த பி.வி. நரசிம்மராவ் அரசு அத்வானி, முரள் மனோஹர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்களை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது வழக்குகளையும் பதிவு செய்தது. சங் பரிவாரத் தொண்டர்கள் பாபர் மசூதி இருக்கும் இடம்தான் ராமர் பிறந்த இடம், ஆகவே அங்கு மிகப் பெரிய கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துத்தான் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
1991ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப் பட்ட பிறகு இரண்டு வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது. ஒரு வழக்கு உபி யின் ராய் பரேலி என்ற ஊரில் உள்ள மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் பதிவானது. இந்த வழக்கு முகம் தெரியாத லட்சக் கணக்கான தொண்டர்களுக்கு எதிராக பதிவானது. இரண்டாவது வழக்கு லக்னோவில் பதிவானது. இந்த வழக்கு அத்வானி, முரளி மனோஹர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்களுக்கு எதிராக பதிவானது. லக்னோவில் நடைபெறும் வழக்கில் 195 சாட்சிகள் விசாரிக்கப் பட்டனர். இன்னும் 800 சாட்சிகள் விசாரிக்கப் பட இருக்கின்றனர். ராய் பரேலியில் மொத்தமுள்ள 105 சாட்சிகளில் 57 சாட்சிகள் விசாரிக்கப் பட்டு விட்டனர்.
இந்தக் கட்டத்தில்தான் இந்த இரண்டு வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து ஏன் விசாரிக்க கூடாது? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. எல்லா வழக்குகளையும் லக்னோ நீதிமன்றத்துக்கு ஏன் மாற்றக் கூடாது? என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் அடிப்படைக் கேள்வியாகும். வழக்கின் மொத்த விசாரணையையும் ஏன் இரண்டாண்டுகளுக்குள் முடிக்க கூடாது? என்றும் உச்ச நீதி மன்றம் கேள்வி எழுப்பியது. எழுத்துப் பூர்வமாக அதாவது written order ஆக உச்ச நீதிமன்றம் இதுவரையில் இந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை. இன்னும் சில நாட்களில் இதனை எழுத்துபூர்வமான உத்தரவாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்து விடும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது. மத்திய அரசின் வழக்கறிஞர் இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத து தான் தற்போதைக்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இருந்து கொண்டிருக்கிறது.
வரும் ஜூலை மாததத்துடன் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைகிறது. அடுத்த குடியரசு தலைவர் பதவிக்கு எல்.கே. அத்வானி யின் பெயர் இப்போதே அடிபடத் துவங்கி விட்டது. பாஜகவிலும், ஆர்எஸ்எஸிலும் அத்வானி ஓரங்கட்டப்பட்டிருந்தாலும், அவரது ஆதரவாளர்கள் இப்போதே அத்வானிக்கு ஆதரவாக காய்களை நகர்த்த துவங்கியிருக்கின்றனர். இதனை முளையிலேயே கிள்ளி எறியத்தான் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தை மோடி கையில் எடுத்திருப்பதாக டில்லி அரசு வட்டாரங்கள் கருதுகின்றன.
"மோடி தான் விரும்புபவர்தான் குடியரசுத் தலைவராக வர வேண்டும் என்பதில் மிகவும் குறியாக இருக்கிறார். அதனால்தான் 25 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த ஒரு வழக்கில் அத்வானியின் பெயரை சேர்க்கும் இந்த முயற்சி. உச்ச நீதிமன்றமே இந்த யோசனையை சொன்னாலும், அதனை மத்திய அரசு வழக்கறிஞர் எதிர் கொண்ட விதம் மோடியின் அரசியலை தெளிவாக புரிய வைத்திருக்கிறது," என்கிறார் டில்லியில் இருக்கும் மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.
2019 ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக வாஜ்பாய், அத்வானி காலத்து மூத்த அரசியல்வாதிகள் யாரும் தேர்தல் களத்தில் இருக்க கூடாது என்பதில் மோடி மிகவும் தெளிவாக இருக்கிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் பாபர் மசூதி விவகாரத்தில் அத்வானி மற்றும் முரளி மனோஹர் ஜோஷி போன்றோரின் பெயர்கள் மீண்டும் இடம் பெறத் துவங்கியிருப்பது.
2002 ம் ஆண்டு குஜராத் இனக் கலவரங்களின் போது மோடியை குஜராத் முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்றி விட வேண்டும் என்று அன்றைய பிரதமர் வாஜ்பாய் விரும்பினார். ஆனால் அத்வானியின் அரசியல் சதுரங்க காய் நகர்த்தல்களால் மோடி 2002 ல் தப்பிப் பிழைத்தார்.
அதற்கான சரியான கைமாறாக இன்று அத்வானியை முற்றிலுமாக மோடி பாஜக வுக்குள் ஓரங் கட்டி விட்டார். 2002 ல் தான் செய்த ஒரு அரசியில் பெருந் தவறுக்கு எல்.கே. அத்வானி இன்று மிகப் பெரிய விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்!