ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பதில் தாமதம்: கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழா தள்ளிவைப்பு
டெல்லி: ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைக்காததால் நாளை டெல்லியில் நடைபெறுவதாக இருந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழா 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆம் ஆத்மி கட்சி மேற்கொண்டு வருகிறது.
நாளை (வியாழக்கிழமை) அவர் ராம்லீலா மைதானத்தில் நடக்கும் விழாவில் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி கெஜ்ரிவால் தன்னுடன் பதவி ஏற்க உள்ள அமைச்சர்களை நேற்று தேர்வு செய்தார்.

இந்நிலையில் கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுப்பதற்கு டெல்லி காங்கிரசில் ஒரு சாரார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று அவர்கள் கெஜ்ரிவால் உருவப்பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்குக் காரணம் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்று நேற்று கெஜ்ரிவால் அறிவித்ததே எனக் கூறப்படுகிறது.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, ‘ஆளுநர் இன்னும் ஆட்சியமைக்க அழைக்காததால் நாளை பதவியேற்பு விழா நடைபெறாது. டெல்லியில் ஆட்சி அமைப்பதை விட டெல்லி மக்களுக்கு சேவை செய்வதே எங்கள் நோக்கம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து வரும் 28ம் தேதி மதியம் 12.30 மணிக்கு ராம்லீலா மைதானத்தில் வைத்து அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications