"ரஷ்யாவை கண்டு நேட்டோ அஞ்சி நடுங்குகிறது.. அதுதான் அனைத்திற்கும் காரணம்" சீறும் அதிபர் ஜெலன்ஸ்கி
கீவ்: உக்ரைன் நாட்டில் போர் தொடர்ந்து வரும் நிலையில், நேட்டோ அமைப்பு தொடர்பாக அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
உக்ரைன் நாட்டின் மீது முழு வீச்சிலான போரைத் தொடங்க கடந்த பிப். 24ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் இதுவரை எடுத்த முயற்சி எதுவும் பலன் அளித்தாகத் தெரியவில்லை. இதன் காரணமாகவே 4 வாரங்களைக் கடந்து போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உக்ரைன் போர்
இந்தப் போர் தொடங்க காரணங்களில் ஒன்று வடக்கு அட்லாண்டிக் ட்ரிட்டி அமைப்பு (நேட்டோ) ஆகும். உக்ரைன் போரைத் தொடங்கும் முன்பு மேற்குலக நாடுகளுக்கும் அதிபர் புதின் சில நிபந்தனைகளை விதித்திருந்தார். குறிப்பாக நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக் கூடாது, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் தனது வீரர்களை நேட்டோ அமைப்பு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் உள்ளிட்டவை இதில் முக்கியமானவை. இந்தச் சூழலில் நேட்டோ அமைப்பைச் சாடும் வகையில் அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைக்க மறுக்க ரஷ்யா மீது இருக்கும் அச்சமே காரணம் என்று அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அச்சம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நேட்டோ இப்போது அவர்கள் எங்களை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்கள் ரஷ்யாவிற்கு அஞ்சி எங்களை (உக்ரைன்) உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும், அது உண்மைதான். இதை ஒப்புக் கொண்ட பின்னரே, நேட்டோ அமைப்பில் இல்லாமலேயே அதன் உறுப்பு நாடுகள் எங்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க முடியும். இதை கடைசியில் ஒரு சமரசமாகச் செய்து கொள்ளலாம். போரின் முடிவு இப்படி அமையத் தான் வாய்ப்புகள் உள்ளன.

ஏற்க முடியாது
நாங்கள் சரணடைய வேண்டும் என்ற ரஷ்யாவின் இறுதி எச்சரிக்கையை உக்ரைன் ஒரு போதும் ஏற்காது. அவர்கள் உக்ரைன் நாட்டின் அப்பாவி மக்களைக் கொன்று வருகின்றனர். எங்கள் மக்கள் கொல்லப்பட்ட பிறகு, அவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது சாத்தியமற்றது, கார்கிவ், மரியுபோல், கீவ் நகர் மீது ரஷ்யா மோசமான தாக்குதலை நடத்தி உள்ளது. அங்குள்ள மக்கள் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். மக்களை நகரங்களை விட்டு வெளியேறி உள்ளனர். இப்படி இருக்கும் போது, ரஷ்யா கூறுவதை எங்களால் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.

அமைதி பேச்சுவார்த்தை
ஒருபுறம் ரஷ்யா உடன் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ரஷ்யா உடன் மேற்கொள்ளப்படும் அமைதி ஒப்பந்தத்தில் 'டி-நாசிஃபிகேஷன்' எதுவும் இருக்க முடியாது நாஜிகளின் அடிச்சுவடுகளை மிதிக்கும் ஒரு நாடு.. நம்மை நாஜி என்று குற்றம் சாட்டும்போது அதை ஏற்க முடியாது" என்றும் அவர் தெரிவித்தார். உக்ரைன் போர் 4ஆவது வாரமாகத் தொடரும் நிலையில், நேட்டோ அமைப்பு தொடர்பாக ஜெலன்ஸ்கியின் இந்த கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ரஷ்யா விளக்கம்
முன்னதாக ரஷ்ய அதிபர் புதின் இதைப் போர் என்றே குறிப்பிடக் கூடாது எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலேயே இந்த ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நல்ல முடிவு எடுக்கப்பட்ட உடன் இந்த ராணுவ நடவடிக்கை உடனடியாக முடித்துக் கொள்ளப்படும் என அவர் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். புதினின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்று நேட்டோ விரிவாக்கத்தை நிறுத்துவது ஆகும்.












Click it and Unblock the Notifications