உத்தரபிரதேசத்தில் ஆசிரம குழாயில் தண்ணீர் குடிக்க முயன்ற தலித் சிறுமியை தாக்கிய பூசாரி
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆஸ்ரமம் ஒன்றின் ஆழ்துழாய் குழாயில் தண்ணீர் குடிக்க முயற்சித்த தலித் சிறுமி மற்றும் அவரது தந்தையை கோயில் பூசாரி ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் சுதா என்பதாகும் 13 வயதாகும் அந்த சிறுமி சம்பல் மாவட்டத்தில் குன்னார் என்ற இடத்தில் தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருக்கும் துண்டா ஆஸ்ரமத்திற்குள் சென்றார்.

அங்கிருந்த அடிபம்ப் குழாயில் தண்ணீர் குடிக்க முயற்சித்தார். அப்போது அவளை அங்கிருந்த கோயில் பூசாரி அடித்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்ட அந்தப் பெண்ணின் தந்தையையும் பூசாரியும், ஆசிரமத்தில் இருந்தவர்களும் அடித்துள்ளனர். இதில் இவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் தலித்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து இருந்தார்.
''கொல்ல வேண்டும் என்றால், என்னை சுட்டுக் கொல்லுங்கள், ஆனால், தலித்களை கொல்ல வேண்டாம்'' என்று கேட்டுக் கொண்டார். இந்நிலையில், இன்று மீண்டும் தலித் சிறுமி மற்றும் அவரது தந்தையின் மீது நடத்தப்பட்டு இருக்கும் தாக்குதல் அதிர்ச்சியை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications